Wednesday, March 14, 2012

உடல் பருமன் குறைய வேண்டுமா?


தேவையான பொருட்கள்:
  1. முள்ளங்கி.
  2. தேன்.
செய்முறை:
முள்ளங்கியை துருவி மேலாகச் சிறிது தேன் கலந்து, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.

Friday, March 9, 2012

பழைய சோறு.!




வெய்யில் காலம் துவங்கிவிட்டது. இனி ஆளுக்கு ஆள் பேச்சுத் துவங்குவதே வெயிலைப்பற்றித்தான் இருக்கும்.

மின்சாரமும் பழிவாங்குவதால் இந்தக் கோடை ஒரு சோதனையான காலமாகத்தான் இருக்கப்போகிறது.

இந்த நேரத்தில் வழக்கொழிந்து வருகிற பழையசோற்றின் சிறப்புப் பற்றிச் சொல்லப் போகிறேன்.

அரிசி, கம்பு, சோளம், தினை, சாமை, ராகி போன்ற தானியங்களால் சமைக்கப்படும் சோற்றைக் கொண்டோ களியைக் கொண்டோ பழைய சோறு தயாரிக்கலாம்.

குறிப்பாக அரிசியும் கம்பும் சோளமும் எளிதில் கிடைக்கக்கூடியவை.

பழைய சோறு என்பது அதற்காகப் பிரத்தியேகமாகத் தயாரிக்கபடுவது அல்ல. சூடாக உண்பதற்காகத் தயாரிக்கப்படும் சாதம் அல்லது களியை உண்டுவிட்டு மீதம் இருப்பது ஆறியபின்பு அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றி வைத்துவிட்டால் சுமார் ஆறுமணிநேரத்துக்குப் பின்னால் பழைய சோறு தயார். அதை மேலும் ஒரு நாள் வரை வைத்திருந்து போதுமான அளவு சோறும் அதிலுள்ள நீரும் சிறிது உப்பும் சேர்த்து பழைய சோற்றுக்கலவையை உண்பதற்குத் தயார் செய்துவிடலாம்.

பொதுவாகப் பழைய சோற்றைக் கையால் பிசைந்து கரைத்தால்தான் நன்கு கூழ்பாகத்தில் உண்பதற்கு நன்கு இருக்கும். கரண்டியால் கலக்கினால் ஒன்றுக்கொன்று ஒட்டாமல் பருக்கை பருக்கையாக இருக்கும். 

சமைப்பது மண் சட்டியாக இல்லாமல் வேறு பாத்திரமாக இருந்தாலும் அதைப் பழைய சோற்றுக்காக எடுத்துவைக்கும்போது மண் சட்டியில் வைத்துத் தண்ணீர் ஊற்றிவைப்பதுதான் சிறந்தது. காரணம் அது கூடுதல் சுவையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். மண் சட்டி இல்லாவிட்டால் மற்ற பாத்திரங்களிலும் வைக்கலாம்.

பழைய சோற்றில் மோரோ தயிரோ கலந்துகொள்வது மேலும் சுவையை அதிகப்படுத்தும். அதனுடன் சின்னவெங்காயத்தை சின்னதாக நறுக்கிப் போட்டோ அல்லது நேரடியாய்க் கடித்துக்கொண்டோ பழைய சோறு சாப்பட்டால் இன்னும் சுவை கூடுதல் ஆகும். முன்பெல்லாம் பச்சைமிளகாயைக் கடித்துக் கொண்டும் பழைய சோறு உண்பார்கள்.

பழைய சோறு தண்ணீர் ஊற்றிவைத்த ஆறில் இருந்து பன்னிரண்டு மணிநேரத்துக்குப் பின்னால் அதை முறைப்படி உப்பும் இருந்தால் மோரோ தயிரோ கலந்து கலக்கிக் குளிர் சாதனப் பெட்டியில் வைத்துப் போதுமான நேரத்துக்குப்பின்னால் சாப்பிட்டால் அதன்சுவையை வர்ணிக்கவே முடியாது.

இது அந்தக்காலத்தில் ஏழை மக்களின் மலிவான உணவாகும். 

சமைத்த உணவைவிட இது கூடுதல் சத்துக்களைக் கொண்டது. எளிதில் செரிக்கக்கூடியது. இயற்கை உணவுக்கு நிகரானது. 

அந்தக் காலத்தில் கடுமையாக உழைக்கும் ஏழைகளும் உழைப்பாளிகளும் விவசாயிகளும் பழைய சோறுதான் சாப்பிட்டு வாழ்ந்தார்கள் என்றால் அதன் சிறப்பை நன்கு உணரலாம்!

அந்தக் காலத்தில் காலை உணவு உண்ணும் நேரத்தைப் பழைய சோத்து நேரம் என்றுதான் கிராமங்களில் சொல்வார்கள்.

பழைய சோற்று வகைகளிலேயே கம்புதான் மிகுந்த மணத்துடனும் சுவையுடனும் முதலிடம் வகிக்கிறது. அதனால்தான் கம்மங்கூழ் பானைகளில் வைத்து தெருவோரங்களில் கூட விற்றபனை செய்யப்படுகிறது.

பழைய சோற்றில் உள்ள சிறப்புகளைத் தனிக் கட்டுரையில் விளக்குவதுதூன் சிறப்பாக இருக்கும். அது ஒருவகையில் மருத்துவகுணமும் இயற்கைத் தன்மையும் கொண்டதாக இருப்பதால் சமைக்கப்படும் எந்த ஒரு உயர்ந்த வகை உணவை விடவும் ஒப்பு நோக்கில் உடல் நலனுக்கு ஏற்றதும் மிகவும் செலவு குறைந்ததும் ஆகும்.

மற்ற உணவை உண்டால் தாகம் எடுக்கும். ஆனால் பழைய சோறு உண்டால் தாகத்தைப் போக்கும்.

பழைய சோற்றை மறக்கவேண்டாமே!

Thursday, March 8, 2012

நலம் நல்கும் மூலிகைகள்.. பகுதி 02.


இஞ்சி.!



இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தமான தேனில் ஊற வைத்து தினமும் இரண்டு துண்டுகள் (ஒரு விரைகடை அளவு) உணவிற்கு முன் உண்டு வர பசியின்மை, செரியாமை, வயிற்று பொருமல் ஆகியவை தீரும்.


அருகம்புல்.!





அருகம்புல்லை ஒன்றிரண்டாக நசுக்கி ஒரு கைப்பிடி எடுத்து பத்து மிளகாய் சேர்த்து நான்கு தம்ளர் நீரை ஊற்றி ஒரு தம்ளராக வற்ற வைத்து வடித்து இளம் சூட்டில் பனங் கல்கண்டு சேர்த்து தினம் இரு வேளை பருகி வர இரத்தம் சுத்தமாகும் . உடல் அரிப்பு வேர்வை நாத்தம் வெள்ளை ஆகியவை தீரும் .


அவுரி.!



அவுரி வேரபட்டையை கைபிடியளவு எடுத்து பத்து மிளகு சேர்த்து நன்கு டம்பளர் நீரை ஒரு டம்பளரக சுண்ட காய்ச்சி தினம் இரு வேளை 
பருகி வர , காணாக் கடி ஒவ்வாமை, தோல் நோய்கள் சில விடங்கள் ஆகியவை தீரும். 

Wednesday, March 7, 2012

நலம் நல்கும் மூலிகைகள்.. பகுதி 01.


மணத்தக்காளி.!



மணத்தக்காளி என்பது பொதுவாக நாம் அனைவரும் அறிந்த ஒரு கீரை வகை (மூலிகை வகை) ஆகும்.  மணத்தக்காளி இலைகளை நன்றாக கழுவி விட்டு நெய்யிலிட்டு வதக்கி மசித்து உணவில் சேர்த்து உண்டு வர வாய்ப்புண், குடல் புண், ஆகியவை தீரும். மேலும் அனைத்து வீடுகளிலும் இதை பருப்புடன் சேர்த்து சமைத்து உண்பார்கள். வாரம் ஒரு முறையாவது உணவில் மணத்தக்காளி இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். நாம் மணத்தக்காளி இலைகளை நேரடியாக கழுகி விட்டு உண்ணலாம்.

முடக்கறுத்தான்.!





முடக்கறுத்தான் என்பது நாம் அன்றாடம் காணுகின்ற ஒரு அற்புதமான மூலிகையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. நாம் அனைவரும் கண்டிருப்போம்  ஆனால் அதன் பெயர் தெரியாமல் நிறைய பேர் இருப்பார்கள். இதன் தாவரவியல் பெயர் cardiospermum helicacabum , ஆகும். இதன் பெயரிலேயே இது எந்த நோயை குணப்படுத்தும் என்று அறியலாம். ஆம்.  இது மூட்டு வலி , முடக்கு வாதம் ,  கைகால் குடைச்சல் ஆகியவற்றை தீர்க்கும். இதன் இலைகளை பறித்து ரசம் வைத்து சாப்பிடலாம். இதன் இலைகளை பறித்து தோசை மாவில் கலந்து தோசையாக ஊற்றி சாபிடலாம். இது எளிமையாக நம் கைஅருகில் கிடைக்க கூடிய ஒரு அற்புதமான மூலிகை. நாம் மூட்டு வலி , கை கால் வலி என்று டாக்டரிடம் போவதை விட வாரம் ஒரு முறை இதை சாப்பிட்டாலே எந்த மூட்டு சம்பந்தப்பட்ட நோயும் நம்மை அணுகாது என்பது நிச்சியம்.


வல்லாரை.!



வல்லாரை என்பது அனைவரும் அறிந்த , ஆனால் அதிகம் பேர் உபயோகபடுத்தாத அற்புதமான மூலிகை ஆகும். இதன் தாவரவியல் பெயர் centella asiatica ஆகும். இது பொதுவாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும்.  கீரையாகவும் கட்டி விற்குமிடத்தில் கிடைக்கும். இதை சமைத்தும் உண்ணலாம். இதன் இலைகளை நிழலில் காய வைத்து பொடியாக செய்து வைத்து கொண்டு ஒரு கிராம் முதல் இரண்டு கிராம் வரை குழந்தைகளுக்கும் , பெரியவர்களுக்கும் கொடுத்து வர ஞாபக சக்தி , அறிவு கூர்மை அதிகரிக்கும். நம்மிடையே கிடைக்கும் அற்புதமான மூலிகை , அனைவரும் பயன்படுத்த வேண்டுகிறேன்..


Tuesday, March 6, 2012

ஓணான்.!!



வேலிக்கு ஓணான் சாட்சி என்று சொல்வர்கள். அந்த அளவு கிராமத்து வேலிகளுக்கும் இந்த ஓணான்களுக்கும் அவ்வளவு நெருக்கம் ஆகும்.

ஓணான் பற்றிக் கிராமத்தில் உள்ளவர்கள் அல்லது தொடர்புடையவர்கள் அனைவருக்கும் தெரியும். அவற்றில் பலவகைகள் உள்ளன. பச்சோந்தி என்பதுவும் ஒரு வகை ஓணான் என்று சொல்வார்கள்.

இப்போது சிறுவர்கள் கிரிக்கெட் மட்டைகளைத் தூக்கிக்கொண்டு திரிவதைப்போல் அந்தக் கால கிராமச் சிறுவர்கள் இந்த ஓணான்களை வேட்டையாடுவது ஒரு பொழுதுபோக்காகும். சரியாகக் குறிவைத்து அடிப்பதற்கு இதன் மூலம் பயிற்சி கிடைக்கும்.

முக்கியமாகக் கள்ளிகளில் தான் நிறைய ஓணான்களைப் பார்க்கமுடியும். இவற்றால் மனிதருக்கோ விவசாயப் பயிர்களுக்கோ பெரிய அளவு தீங்கு என்று சொல்லும்படி எதுவும் இல்லை. ஆனால் சிறுவர்களின் பொழுதுபோக்கிற்காக எண்ணற்ற ஓணான்கள் பலியாகும். ஆனால் தற்காலத்தில் அப்படிப்பட்ட விளையாட்டு எந்தச் சிறுவர்களுக்கும் அனேகமாகத் தெரியாது. அதனால் ஓணான்களுக்குப் பாம்புகளைத்தவிர வேறு ஆபத்து ஒன்றுமில்லை.

ஆனால் அவற்றின் வாழ்விடங்களான வேலிகள் அழிக்கப்பட்டு வருவதால் கிராமப்புறங்களில்கூட அவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டன. பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டால் ஓணான்களுக்கு இரையாகின்ற பலவகைப் பூச்சி இனங்கள் அழிக்கப்படுவதும் ஓணான்கள் வாழ்வுக்குப் பெரும் சோதனை ஆகும்.

Monday, March 5, 2012

பயங்கர(மறதி)வாதி.!





சில வருடங்களுக்கு முன்பு நானும் எனது நண்பர்களுமாக ஐந்துபேர் ஜெய்ப்பூர், ஆமதாபாத், டெல்லி, ஆக்ரா போன்ற இடங்களுக்கு சுற்றுலா சென்றிருந்தோம்.

அப்போது டெல்லியில் நாடாளு மன்றத்தையும் பார்க்க ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சிபாரிசுக் கடிதத்துடன் சென்றிருந்தோம். அப்போதுதான் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்து ஒருவருடம் ஆகியிருந்தது.

கடிதத்தைக் காட்டி அனுமதிக்காக வரவேற்பறையில் காத்திருந்தோம். அந்த வரவேற்பறையில் சுற்றிலும் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. தவிரவும் அங்கிருந்து உள்ளே செல்லும் நுழைவாயிலில் பைபர் கிளாஸில் செய்ப்பட்ட உறுதியான தடுப்பு இருந்தது. அதன் வழியாகத்தான் செல்ல வேண்டும். நாம் அருகில் சென்றவுடன் அங்கே மேடைபோல் உள்ள ஒருஸ்கேனிங் மெஷின் மேல் நமது பையை வைக்கவேண்டும். நம்மிடமோ பையிலோ ஆயுதங்கள் ஏதும் இல்லாவிட்டால் அந்தத் தடுப்புக் கதவு திறக்கும். ஏதாவது இருந்தால் அந்த ஸ்கேனிங் மெஷின் காட்டிக் கொடுத்துவிடும். மாட்டிக்கொள்வோம்.

அனுமதி கிடைத்தவுடன் அந்தத் தடுப்புக்கருகில் வரிசையாக நின்றோம். அப்போதுதான் பகீரென்று எனது கைப்பையில் கத்தி வைத்திருந்தது நினைவுக்கு வந்தது. உயிரே போனதுமாதிரி ஆகிவிட்டது. நான் எப்போதும் வெளியூர் சென்றால் பழம் அறுப்பதற்காகவும் தற்காப்புக்காகவும் நல்ல உறுதியான கத்தி ஒன்றைப் பையில் வைத்திருப்பது பழக்கம். ஆனால் இப்படியொரு சிக்கலான நிலைமை வரும் என்று யார் கண்டார்கள்?


எதுவும் செய்வதற்கோ வெளியில் போவதற்கோகூட வழியோ நேரமோ இல்லை. யாருக்கும் தெரியாமல் அலுங்காமல் வெளியே எடுத்து அங்கிருக்கும் சோபாவுக்கடியில் சொருகிவிட்டுப் போய்விட்டால் என்ன என்று ஒரு வினாடி நினைத்தேன். ஐயோ! கண்காணிப்புக் காமிராவில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் துப்பாக்கியுடன் அல்லவா நுழைவார்கள்? என்ன செய்வது! ஒரே பதட்டம்!

எப்படியோ ஆகட்டும். நாம் உண்மையைச் சொல்வோம். அதற்குப் பின்னால் நடப்பதை நம் வாழ்வில் ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்! தூக்கிலா போட்டுவிடப் போகிறார்கள் என்று மனதைத் தைரியப்படுத்திக்கொண்டு நுழைந்தேன். இதயம் வேகமாகத் துடிப்பதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

என்ன அதிசயம்! எந்த அலாரமும் அடிக்கவில்லை, எந்த மெஷினும் என்னைக் காட்டிக்கொடுக்கவில்லை! நாடாளுமன்றத்திற்கு உள்ளே சுற்றிப் பார்த்துவிட்டு அறைக்குத் திரும்பினோம். அங்கே மறந்துபோய் வைத்துவிட்டுப்போன கத்தி என்னைப் பார்த்துச் சிரித்தது.

Sunday, March 4, 2012

இரவு வானம்.!!




இரவு வானில் விண்மீன்களையும் கோள்களையும் ராசிகளையும் கண்டு கழிக்க விரும்பும் நண்பர்களே! 

இரவு வானின் வரைபடத்தை வைத்து எப்படி அடையாளம் காண்பது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் உள்ளபடியே கற்றுக்கொள்ளமுடியும்.

இரவில் வெளிச்சமோ தூசோ உயரமான மரங்களோ குன்றுகளோ இல்லாத தூய்மையான தனியான இடந்தான் அதற்குச் சரியான இடம்.

இல்லாவிட்டால் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவற்றைக் காண முடியாது. 

அத்தகைய ஒரு இடத்தில் மொட்டை மாடியாக இருந்தாலும் சரி, வயல்வெளியாக இருந்தாலும் சரி கட்டிலில் அல்லது தரையில் வடக்குநோக்கித் தலையை வைத்துப் படுதுக்கொள்ளவேண்டும்.மேப்பை நமது முகத்துக்கு நேராக வைத்துக்கொண்டு டார்ச் விளக்கின் உதவியால் பார்த்து அதே வடிவத்தில் விண்ணில் தெரியும் காட்சியைச் சரியாகக் கண்டுபிடிக்கப் பழகவேண்டும். அது மிக எளிமையானதுதான்.

நின்றுகொண்டே பார்க்க விரும்பினால் தெற்குமுகமாக நின்றுகொண்டு வானை அண்ணாந்து பார்க்கவேண்டும் . 

பழகிவிட்டால் அதன் பின் மேப்பைப் பார்த்தாலே வானில் இப்படித்தான் இருக்கும் என்று எளிதில் புரிந்து விடும்.

Saturday, March 3, 2012

பொன்வண்டு..!!




இதுதான் பொன் வண்டு. கொங்கு நாட்டில் இதைப் பொன்னாம்பூச்சி என்று சொல்வார்கள். பசுமைநிறத்துடன் பலாக்கொட்டை அளவில் இருக்கும். மற்றொரு இனம் உடல் சிவப்பாகவும் தலைமட்டும் பசுமையாகவும் உருவத்தில் பெரியதாகவும் இருக்கும். இதை மலைப் பொன்னாம் பூச்சி என்பார்கள்.

பூச்சி இனங்களிலேயே அருவருப்பு இல்லாமல் சர்வசாதாரணமாகப் பிடித்து விளையாடக்கூடியது இந்தப் பொன்வண்டு.

அதைத் திருப்பி மல்லாக்கப் போட்டுவிட்டால் இறக்கைகளை அடித்து ரீங்காரமிட்டபடி குட்டிக்கரணம்போட்டு சமநிலைக்கு வருவது பார்க்க அழகாக இருக்கும்.

நான் சிறுவயதில் மழைக்காலங்களில் இவற்றைப்பிடித்துத் தீப்பெட்டிகளில் அடைத்துவைத்து விளையாடுவேன். முட்டைகள்கூட வைக்கும்.

இவை பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் வெள்வேல் மரங்களில் அதன் இலைகளைத் தின்று வாழும்.

ஆனால் சமீப காலங்களில் இது கண்ணில் காண்பதே அரிதாகிவிட்டது. எனது பேரனுக்கு விளையாடக் கொடுப்பதற்காக வெள்வேல மரங்களில் தேடிப் பார்த்துக் கிடைக்காமல் இப்போது அந்த முயற்சியைக்கூடக் கைவிட்டுவிட்டேன். 

ரசாயன உரங்ளையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தத் துவங்கியபின்பு நாம் இழந்துவரும் உயிரினங்களில் இந்தப் பொன்வண்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான்! யாரேனும் பார்த்திருந்தால் சொல்லுங்கள் காதிலாவது கேட்டுக்கொள்கிறேன்!.....

Friday, March 2, 2012

ஓலைச் சுவடி!




முற்காலத்திலிருந்து சமீபகாலம் வரை காகிதம் கண்டுபிடிக்கப்படும் வரை கல்வி சம்பந்தமான அனைத்துப் பயன்பாட்டுக்கும் பனையோலைச் சுவடிகள்தான் பயன்பாட்டில் இருந்தன.

இன்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் சங்க இலக்கியங்களும் சித்தர் பாடல்களும் கம்ப ராமாயணமம் திருக்குறளும் எல்லாம் இந்தப் பனையோலைச் சுவடிகளில்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் தங்களை இருப்பாகக் கொண்டிருந்தன.

பனை பலவகையிலும் நமது வாழ்வாதாரமாகமட்டுமல்ல கல்வி, பண்பாடு. கலை இலக்கியத்துக்கும் ஆதாரத் தூணாக இருந்தது.

பனையும் நம் தாய்த் தமிழ் மொழியும் இணைபிரியாத இரட்டையர்கள்.

அந்தோ பரிதாபம்! காகிதம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் பனைமரத்தின் பாரம்பரியத்தை மறந்தோம்.

பெற்றோர் மறைந்தாலும் அவர்களின் உருவப்படங்களைப் புனிமாகக் கருதி மதிக்கிறோம். ஆனால் அதற்கு ஈடாக மதிக்கவேண்டிய பனையைமட்டும் நன்றி கொன்றதனமாக மறந்துவிட்டோம்.

என் அனுபவத்தில் கண்ட ஒரு உண்மையைச் சொன்னால் இதற்குப் பொருத்தமாக இருக்கும்.

ஒரு கொலை வழக்குக்காக சம்பவ இடத்துக்குச்சென்ற காவலர்களுக்கு அங்கிருந்த வேலையாள் மரமேறி இளநீர்குலையைத் தள்ளி அவர்களுக்குச் சீவிக்கொடுத்து அவர்கள் குடித்தபின் அதனுள் இருந்த வழுக்கையை எல்லாம் வழித்துக் கொடுத்து உண்டு இளைப்பாறியபின்பு என்ன செய்தார்கள் தெரியுமா?

அந்த அப்பாவி மனிதரை அங்கிருந்த ஒரு தடியை எடுத்து அடித்து உதைத்து அவரையும் ஒரு எதிரியாக வழக்கில் சேர்த்து ஆயுள்தண்டனையம் வாங்கிக் கொடுத்தார்கள். 

அதுபோன்று பலவகையிலும் பனை நமக்குப் பயன்பட்டதையும் மறந்து துரோகத்தனமாக வெட்டி சூளையில் போட்டு எரித்துக்கொண்டு உள்ளோம்.

கொடுமை! கொடுமை!

Thursday, March 1, 2012

தும்பை..

 


இதுதான் தும்பைச்செடி! மழைக் காலங்களில் திரும்பிய பக்கமெல்லாம் பசுமையாகக் காட்சிதரும்.

இதன் பூவை வெண்மைக்கு உதாரணமாகச் சொல்வார்கள். சுத்தமாக நரைத்துப்போன தலைகளைத் தும்பைப் பூவைப்போல் நரைத்திருப்பதாகச் சொல்வார்கள். (என்னை இன்னும் அப்படி யாரும் இதுவரை சொல்லவில்லை)

தும்பைச் செடிக்கும் வண்ணத்துப் பூச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டும் மிருதுவானவை. தும்பைப் பூவில் தேன் உறுஞ்ச வண்ண வண்ணமாக வண்ணத்துப் பூச்சிகள் பறப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

மிருதுவான தும்பைச் செடிகளைக் கொத்தாகப் பிடுங்கி அதைக் கொண்டே வலிக்காமல் வண்ணத்துப்பூச்சிகளைப் பிடித்து விளையாடுவோம்.

தும்பைச் செடிக்குப் பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. எனக்குத் தெரிந்த ஒன்றைச் சொல்கிறேன். 

தும்பை, துளசி, இவற்றின் சாரெடுத்து மிளகைத் தூளாக்கி அதையும் சேர்த்து இவை மூன்றையும் கொண்ட கலவையுடன் சிறுவர்களின் சிறுநீர் கொஞ்சம் கலந்து நசியம் என்னும் மருந்து தயாரிப்பார்கள். அதை ஏதோ ஒரு நோய்க்காக எருமையின் மூக்கில் விடுவார்கள். 

இதற்குப் பயந்துகொண்டே எங்கள்வீட்டுப்பக்கம் இருந்த ஒரு தாத்தாவைக் கண்டால் சிறுவர்கள் ஓடிவிடுவார்கள்.

இப்போதும் தும்பைச்செடி மழைக் காலங்களில் காலி இடங்களில் வளருகிறது. ஆனால் அதை நாடிவரும் வண்ணத்துப் பூச்சிகளைத்தான் முன்போல் காணோம். 

நசியம் விடும் தாத்தாக்களையும் காணோம். நினைவுகள்மட்டும் பசுமையாக உள்ளது.

Wednesday, February 29, 2012

மண்பானை.!




இதுதான் இன்று வீடுகளில் புழக்கத்தில் இல்லாத மண்பானை.

இதைக் கிராமங்களில் தாளி, மொடா என்றும் சொல்வார்கள்.

மின்சாரம் இல்லாமலே குளிர்ந்த நீரை நமக்கு உருவாக்கித் தரும் வரலாற்றுப் பெருமைமிக்க பாத்திரம். 

முற்காலத்தில் இந்தப் பானை பலவழிகளில் வாழ்வில் பயன்பட்டு வந்தது.

தண்ணீர் ஊற்றிவைக்க, தானியங்கள் போட்டுவைக்க, வருட செலவுக்காக நல்லெண்ணெய் விளக்கெண்ணெய் போன்றவை ஊற்றிவைக்க, மிளகாய், புளி, உப்பு போன்றவைபோட்டுவைக்க இது பயன்பட்டது.

விசே சகாலங்களில் அதிகம்பேருக்கு ஒரே நேரத்தில் சமைக்க, குடும்பத்தில் உள்ள அனைவரும் குளிப்பதற்கு வெந்நீர் வைக்க இன்னும் எத்தனையோ வேலைகளுக்குப் பயன்படும்.

ஏன், எனது அனுபவத்தில் கூட பொங்கல் சமயத்தில் சுட்டுப் பானையில் அடுக்கிவைத்த முருக்கையும் எள்ளுருண்டையையும் எடுக்கமுயன்று தள்ளிவிட்டு உடைத்த காலங்கள் பசுமையானவை. 

வீட்டுக்குள் எட்டாதவற்றை எடுக்க ஸ்டூலாகவும் இது பயன்பட்டது.

அந்தக்காலத்தில் பணக்காரர்கள் பொன்னையும் பொருளையும் பானைகளில்போட்டு நிலத்தில் புதைத்துவைத்ததும் உண்டு. இன்றும் புதையல்களாக பலஇடங்களில் கிடைக்கிறது.

இறந்தவர்களைப் புதைக்க சவப்பெட்டிகளாகவும் பயன்படுத்தினார்கள். அதைத்தான் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் முதுமக்கள் தாளிகள் என்று சொல்கிறார்கள்

பானையில் சமைக்கும் சோறும் பானையில் ஊற்றி வைக்கும் தண்ணீரும் தனிச் சுவையுடன் இருக்கும். 

அந்தக் காலத்தில் வழிப்போக்கர்களுக்குக்கூட தண்ணீர்ப் பந்தல்கள் வைத்துப் மண்பானைகளில் குளிர்ந்த தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது. 

திருவிழாக் காலங்களில் நீர்மோரும் பானகமும் மண்பானைகளில் வைத்து வழங்கப்பட்டன.

ஆதியிலிருந்து இன்று வரை கள்ளு ஊற்றிவைக்க மன்பானைகள்தான் புழக்கத்தில் உள்ளன.(அதுதான் இன்றுவரைநீடிக்கிறது)

மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்த இது இன்று புழக்கத்தில் இருந்து மறைந்துவிட்டது. 

ஆனால் இன்றும் நகரங்களில்கூட குடிதண்ணீர் மண்பானைகளில் ஊற்றிவைத்துக் குடிப்பது விரும்பப்பட்டாலும் அதற்கேற்ற சுத்தமான குடிநீர் அறிதாகிவருவதால் நவீன சாதனங்களின்மூலம் சுத்திகரிக்கப்படும் தண்ணீரின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. 

அதன் காரணமாக பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டினால் சுற்றுச் சூழல் பிரச்சினை அதிகரித்து வருவதோடு குடிதண்ணீர்கூட வர்த்தகப் பொருளாகி விற்பனைக்கு வந்துவிட்டதுதான் சோகமான விஷயம்!

நவீன வாழ்க்கை என்ற பெயரால் நாம் இழந்து வரும் எண்ணற்றவைகளில் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க இந்த மண்பானைகளும் அடங்கும்!....

Tuesday, February 28, 2012

ஆபத்தானவர் யார்?




பாம்பை மிகக்கொடியதென்று கூறுகிறோம். ஆனால் எந்தப் பாம்பும் எந்த மனிதரையும் தேடிச்சென்று கடித்ததில்லை. நாம் தூங்கும்போது கூட. 

ஆனால் அவை எங்கேனும் மறைந்து வாழ்ந்தால்கூடத் தேடிச்சென்று அடித்துக் கொல்கிறோம். 

பாம்பு நம்மைத் தேடிவந்து கொல்வதாக இருந்தால் ஒரு மனிதன் உயிர்வாழ முடியுமா? ஆனாலும் அவை அப்படிச் செய்வது இல்லை.

ஆனாலும் சொல்கிறோம் சொல்கிறோம் பாம்பு கொடியதென்று! 

ஆனாலும் சொல்கிறோம் மற்ற உயிரினங்ளைவிட மனிதன் மேலானவன் என்று! 

இதுதான் மானிட நீதியா?

உண்மையில் ஆபத்தானவர் யார்?

Monday, February 27, 2012

கொடுக்காப் புளி.!




விவவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் முக்கியமாகக் கிணற்று மேட்டிலும் இதை வளர்ப்பார்கள். இதற்குப் பாசனம் தேவை இல்லை. ஆனால் பாசன வாய்க்கால் ஓரங்களில் இருப்பவை நன்கு செழித்து வளரும். 

இந்த மரம் குட்டையான முட்கள் நிறைந்ததாக இருப்பதால் வேலிக்காகவும் அந்தக்காலத்தில் நடுவதுண்டு. இதன் இலை வெள்ளாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும்.

ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் பாசனக் கிணறுகளில் மாடுகளைக் கொண்டு நீர் இறைக்கப்பட்டபோது வாரியில் நிழலுக்காக இந்தமரங்கள் நட்டு வளர்க்கப்படும்.

வேலிகளில் சிறியதாக வளரும் இது விட்டுவைத்தால் வேம்பு அல்லது புளியமரம்போல் பெரியதாக வளரும் இயல்படையது. நன்கு வளர்ந்து முற்றிய மரங்கள் பல்வகை மரச் சாமான்கள் செய்யயப் பயன்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலக் கிராமச் சிறுவர்களுடன் இது நெருங்கிய தொடர்புடையது. இதன் சுருள் சுருளான பசுமையான சிவப்பான அழகான காயும் பழங்களும் உண்ணப் பயன்படும். சில ரகங்கள் துவர்ப்புத் தன்மை மேலோங்கியும் சிலரகங்கள் தித்திக்கும் சுவையுடனும் பழங்களைக் கொண்டிருக்கும். வெடித்த பழங்கள் நல்ல சுவையாக இருக்கும். மருத்துவப் பயன்களும் உண்டு.

இதன் முற்றிய அடிமரத்தில் முட்கள் இருக்காது. அதனால் எட்டியவரை சல்லைகளால் காய் பறித்துவிட்டு எட்டாத உயரத்தில் இருப்பதை முள்ளில்லாத அடிமரத்தில் ஏறி பாதிமரத்தில் இருந்து மீண்டும் சல்லைகளால் காய் பறிப்பார்கள்.

எப்படி இருந்தாலும் நீளமான கொக்கிச் சல்லைகளுடன் சிறுவர்கள் இந்த மரம் இருக்கும் இடங்களைத் தேடி அலைவதும் கண்டும் காணாமலும் இதன் பழங்ளைப் பறித்துக்கொண்டு யாரேனும வந்துவிட்டால் ஓட்டம் பிடிப்பதும் வேடிக்கையான அனுபவங்கள். சிலநேரங்களில் இரக்கமற்ற ஆட்களிடம் மாட்டிக்கொண்டு சல்லைகளை இழப்பதும் உண்டு.

சிறுவர்கள் மேல் பாசம் கொண்டு பறித்துத் தருபவர்கள் கொஞ்சம் பேர். சிறுவர்களின் ஓயாத தொல்லைக்குப் பயந்துகொண்டு மரத்தையே வெட்டியவர்களும் உண்டு.

காக்கைகள் பறித்துச் சென்று வீடுகளின் கூரைமேல் வைத்துத் தின்னும். அப்போது அது கொடுக்காப்புளிப் பழத்தை கீழே வைப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்து திடீரெனப் பலமான சப்தம் கொடுத்து காக்கையை விரட்டிவிட்டு பழத்தை வீட்டின்மேல் ஏறி எடுத்துக் கொள்வார்கள். காக்கைகள் கொண்டுவரும் பழம் மிகவும் சுவையாக இருக்கும்.

எப்படியோ எந்தப் பாசனமும் தேவைப்டாமல் எந்த வரட்சிக்காலத்திலும் உயிர் வாழ்வதுமட்டுமல்ல கனிகளையும கொடுக்கக்கூடிய கொடுக்காப்புளி மரமும் பழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது. சிலபகுதிகளில் மட்டும் காணலாம்.

வர்த்தக ரீதியில் லாபம் தராத எதையும் ஒழிப்பது என்ற மனித விதியின்படி இதுவும் ஒரு நாள் காணாமல் போகக்கூடும்…..

Wednesday, February 8, 2012

பேய்களுக்கு கால்கள் உண்டா?


சித்தர்கள் தத்துவப் படி மனித உடல் என்பது அன்னமயகோசம், பிராணமயகோசம், ஞானமய கோசம், என்று மூன்று வகைப்படும்.
கண்ணுக்கு தெரியும் ஸ்தூல சரீரம் அன்னமயமானது அதாவது சதை, எலும்பு, ரத்தம் சம்பந்தப் பட்டது.

பிராணமயமென்றால் சூட்சம். கண்ணுக்கு தெரியாத உயிர் சம்பந்தப் பட்டது.
ஞானமயமென்றால் எண்ணங்கள் கர்மாக்கள் சம்பந்தப் பட்டது இதுவும் கண்ணுக்கு தெரியாத சரீரமாகும்.

உயிர் பிரிந்த பிறகு அன்னமய கோசம் அழிந்து விடுவிறது மற்ற இரண்டும் தான் ஒன்றோடு ஒன்று பிரியாமல் பித்துரு லோகத்தில் வாசம் செய்கிறது.
இதையே ஆவி என்றும் பேய் என்றும் அழைக்கிறார்கள்.

ஆவி வடிவம் என்றாலே அது நகர்ந்து செல்ல உறுப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

அவர்கள் நினைத்தப் படி நினைத்த இடத்திற்கு நிமிட நேரத்தில் நகர்ந்தே செல்லலாம் அதாவது காற்று போல அதனால் ஆவிகள் தாங்கள் நடமாட கால்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

ஆனாலும் பலர் நினைக்கிறப் படி ஆவிகளுக்கு கால்கள் இல்லாமலில்லை கால்கள் உண்டு.

தான் வாழ்ந்த போது பெற்றிருந்த சரீரத்தின் சாயலிலேயே பல ஆவிகள் நடமாடுவதாக அமானுஷ்ய ஆய்வுகள் சொல்கின்றன.

எனவே பேய்களுக்கு கால் உண்டு.

Monday, February 6, 2012

குருசண்டாள யோக ஜாதகம்..!

ஒரு ஜாதகத்தில் குருவும் ராகுவும் சேர்க்கை பெற்று இருந்தால் அந்த ஜாதகம் குருசண்டாள யோகமுடைய ஜாதகம் என்று அழைக்கப்படுகிறது அதாவது குரு ஜீவகாரகன் அதே நேரம் ராகு மரணகாரகன் இதை இன்னொரு விதத்திலும் சொல்லலாம் குரு என்பது தெய்விக சக்திகளை குறிக்கும் கிரகமாகும் ராகுவோ அசுர சக்தியின் அடையாளமாக காட்டப்படும் கிரகமாகும்

குருவின் பொது குணம் ஜீவன் அதாவது உயிர் சாத்வீக எண்ணம் ஆத்ம சிந்தனை மத போதனை சமூக தொண்டு போன்றதாகும் ராகுவின் பொது குணம் போதை வஸ்துக்களின் ஈடுபாடு பேய் பிசாசுகள் துர்தேவதைகள் போன்றவற்றை நேசித்தல் மாமிசம் விஷம் விபச்சாரம் நம்பிக்கை இன்மை போன்றதாகும்

ஒரே வீட்டில் ஆச்சாரமுடைய ஒருவனும் ஒழுக்கம் கெட்ட ஒருவனும் இருந்தால் அந்த வீடு எப்படி போர்களமாக இருக்குமோ அதே போலதான் ராகு மற்றும் குருவின் செயற்கை பெற்ற ஜாதகனின் மனோ நிலை இருக்கும் அவன் மனது ஒருபுறம் நியாய தர்மங்களை சிந்திக்கும் இன்னொரு புறம் அவைகளால் என்ன்ன பலன் எல்லாவற்றையும் மூட்டை கட்டி பரண் மீது போட்டு விட்டு உடம்பில் தெம்பு இருக்கும் வரை ஆடு என்று போதனை செய்யும் இரண்டிருக்கும் இடையில் அகப்பட்டு கொண்டவனின் கதி எப்படி இருக்கும் சற்று சிந்தித்து பாருங்கள்


அவன் அறிவு கடினமான விஷயங்கள் எதையும் சிந்திக்க மறுக்கும் தனக்கு புரியவில்லை தன்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை என்பதற்காக அனைத்து தரப்பிலும் சந்தேகப்பட வைக்கும் இந்த சந்தேகம் கடவுளை மட்டும் தாக்காது தன்னை சுற்றி இருக்கும் எல்லாவற்றையுமே தாக்க ஆரம்பிக்கும் உலகத்தில் உள்ள அனைவருமே தன்னை போல் இருந்தால் தான் தனக்கு பாதகாப்பு என்று கருதி மற்றவர்களை தனது வழிக்கு இழுத்து கொள்ள சாம,பேத,தான தண்டங்களை பிரயோகம் செய்ய வைக்கும் தனது இழுப்புக்குள் வர மறுக்கும் மனிதர்களையும் கருத்துக்களையும் பரிகாசமாக பேசி இழிவு படுத்தி தன்சட்டை காலரை தானே தூக்கி விட்டு கொள்ளும்

குருவும் ராகுவும் ஒரே வீட்டில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் தான் நாட்டில் மத கலவரங்கள் சமூக விரோத சக்திகளின் அத்து மீறல்கள் இயற்க்கை சீற்றங்கள் உள்நாட்டு குழப்பம்கள் அதிகமாக இருக்கும் நீங்களே பஞ்சாங்கத்தை எடுத்து வைத்து கொண்டு ராகு குரு சேர்ந்திருக்கும் காலத்தின் வருடத்தை குறித்து கொண்டு அந்த வருடத்தில் இத்தகைய அசம்பாவிதத்தை அதிகரித்துள்ளதா குறைந்துள்ளதா என்பதை ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால் இக்கிரக சேர்க்கையின் கொடுமை என்னவென்று தெளிவாக தெரியும்

குருசண்டாள யோகம் என்பது இத்தகைய கீழ்மை நிலையை குறிப்பது ஆகுமே தவிர ஒட்டு மொத்தமாக நாத்திகர் அனைவரையும் இந்த யோகம் உடையவர்கள் என்று சொல்ல முடியாது காரணம் குருசண்டாள யோகம் கொண்டவர்கள் கடவுளை மட்டுமல்ல தனிமனித ஒழுக்கத்தையும் நம்பாதவர்கள் ஆகும் பல நாத்திகர்கள் கடவுளை புறக்கணித்தாலும் தனிமனித ஒழுக்கத்தை புறக்கணிக்காமல் நேர்மையுடன் வாழ்கிறார்கள் அப்படி பலரையும் நான் பார்த்திருக்கிறேன்

பொதுவாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை நாத்திகர்கள் என்று நாம் அழைக்கிறோம் அப்படி அழைப்பது முற்றிலும் சரி என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை நாத்திகம் என்ற வார்த்தை எதுவுமே இல்லை என்ற பொருள் படும் அதாவது நம்பிக்கை தன்னம்பிக்கை எதிர்பார்ப்பு இப்படி எதுவுமே இல்லை என்று சொல்வதுதான் முழுமையான நாத்திகம் ஆகும் தன்மீதும் தனக்கு வழ்க்காட்டும் எதோ ஒரு தலைவரின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் எவரையும் நாத்திக வாதிகள் என்று சொல்லிவிட முடியாது அவர்கள் அனைவருமே குருசண்டாள யோகம் உடையவர்கள் என்று கூறவும் ஜாதக ரீதியில் ஆதாரம் இல்லை.

Sunday, February 5, 2012

ஜாதகப்படி நோய் தீருமா...?

பொதுவாக ஜோதிடத்தின் நம்பிக்கை இல்லாதவர்கள் எங்கோ வெகுதொலைவில் இருக்கின்ற கிரகங்கள் மனித வாழ்க்கையை எப்படி பாதிக்கும் எதற்காக அது ஒருவனுக்கு நன்மையையும் இன்னொறுவனுக்கு தீமையும் செய்யவேண்டும் என்று கேட்பார்கள் அந்த கேள்வி சரியானதாகவும் நமக்கு தோன்றும்

ஆனால் ஒருவிஷயத்தை மிக சுலபமாக நாம் மறந்துவிடுகிறோம் பூமி மேல்பரப்பின் மீது உயிர்கள் ஒட்டிக் கொண்டிருப்பதற்கும் அயன வெளியில் கிரகங்கள் ஒழுங்கு முறையில் சுற்றுவதற்கும் கண்ணுக்கு தெரியாத ஒரு வித ஈர்ப்பு சக்தி காரணமாக இருக்கிறது என்று விஞ்ஞானம் சொல்வதை நாம் அறிவோம்

பூமியில் உள்ள தாவரங்கள் ஒளி சேற்கையினால் தங்களது உணவை தாங்களே சமைத்து கொள்வதை விஞ்ஞானம் ஆதார பூர்வமாக நிறுபித்து காட்டுகிறது சூரிய ஒளியை சின்னஞ்சிறிய செடிகள் எப்படி ஈர்த்து கொள்கிறதோ அதற்கு எந்தவிதமான சக்தி தாவரங்களுக்குள் மறைந்திருந்து செயலாற்றுகிறதோ அதே போன்ற சக்தி அல்லது அதை விட சற்று மேம்பட்ட சக்தி மனித சரீரத்துக்குள்ளும் மறைவாக இருந்து செயலாற்றுகிறது

அப்படி பட்ட மறைபொருளான ஈர்ப்பு சக்தி கிரகங்களின் சுபம் மற்றும் அசுப தன்மைகளை மனிதனுக்குள் கொண்டு வந்து பல காரியங்களை செய்கிறது செய்விக்கிறது சரி அப்படி செய்வதாக இருக்கட்டும் எதனால் இந்த கிரகங்கள் மனிதனுக்கு நல்லதையும் கெட்டதையும் செய்ய வேண்டும் அதன் மூல காரணம் என்ன என்ற அடுத்த கேள்வி நம் மனதிற்குள் எழும்பும்

இந்த இடத்தில் நமது விஞ்ஞான புத்தியை சற்று தூரவைத்து விட்டு மெய்ஞானத்தை நாட வேண்டும் உலகில் வேறு எந்த மதமும் சொல்லாத அல்லது அறியாத கர்ம கொள்கையை நமது இந்து மதம் சொல்கிறது இந்த கர்ம கொள்கைக்கு எளிமையான விளக்கம் சொல்ல வேண்டுமென்றால் ஒரு செயலுக்கான பலனை பெறுவது என்று சொல்லலாம் அதாவது நன்மை செய்தால் நன்மையான பலனும் தீமை செய்வதினால் தீமையான பலனும் அடைவது இதன் அடிப்படையாகும்

மனிதன் தனது வாழ்நாளிலும் வாழ்வுக்கு முந்தைய நாளிலும் நல்லதும் கெட்டதுமாக பல செயல்களை செய்கிறான் அதனுடைய விளைவுகளையும் வாழ்நாளை தாண்டியும் அனுபவிக்கிறான் அப்படி என்றால் நன்மை செய்தவனுக்கு நன்மையையும் தீமை செய்தவனுக்கு தீமையும் வகையறிந்து வழங்க சக்தி மிக்க நீதிபதி வேண்டும் அந்த நீதிபதியை தான் ஆத்திகன் கடவுள் என்கிறான் நாத்திகன் இயற்க்கை என்கிறான்

நீதிபதியின் தீர்ப்பை செயல்வடிவம் படுத்த சில புறக்கருவிகள் வேண்டும் அதே போலவே கடவுளின் தீர்ப்பையும் மனிதனுக்கு கொண்டுவந்து சேர்க்க சில புறக்கருவிகள் தேவைபடுகிறது இந்த் இடத்தில் தான் ஜோதிட சாஸ்திரம் நுழைகிறது கடவுளின் தீர்ப்பை செயல்படுத்தும் கருவிகளே கிரகங்கள் என்கிறது அதாவது கர்மாவின் பயனை மனிதனுக்கு நேரடியாக கொடுப்பது கிரகங்கள் தான்

இதன் அடிப்படையில் பார்க்கும் போது மனிதன் அனுபவிக்கும் எல்லாவிதமான அனுபவங்களுக்கும் கிரகங்கள் என்பது கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் காரணமாக இருக்கிறது அதாவது மனிதனுக்கு நோய் வருவதற்கும் விலகுவதற்கும் கூட கிரகங்கள் காரணமாக இருப்பதை அனுபவ பூர்வமாக உணரலாம்

சின்னஞ்சிறிய குழந்தை என்ன பாவம் செய்தது அதற்கு ஏன் இத்தகைய பிணிகள் வந்து துயரத்தை கொடுக்க வேண்டும் என்று நமது இளகிய பணம் சிந்திக்கும் இப்போது கண்ணெதிரே குழந்தையாக இருக்கும் இந்த சிறிய குழந்தை நேற்று அதாவது முற்பிறப்பில் பெரியவனாக இருந்துதான் மாண்டிருக்க வேண்டும் அந்த காலகட்டத்தில் செய்த வினைகளுக்கான பலனை இப்போது அனுபவிக்க வேண்டிய சூழல் இருக்கலாம் அதன் விளைவுதான் பல குழந்தைகள் நோய்களாலும் வறுமையாலும் துன்பப்படுவது

திருமதி மைதிலி சுப்ரமணியன் குழந்தை அனுபவீக்க்ம் வேதனைக்கும் இது தான் காரணம் என்று ஜாதகம் சொல்கிறது குழந்தையின் ஜனன ஜாதகத்தின் சந்திரன் வலுவிழந்து மாந்தியால் பார்க்க படுகிறான் இதனால் தான் சீதள சம்பந்தமான நோய் அந்த குழந்தையை வாட்டி வதைக்கிறது மேலும் அதன் ஜாதகப்படி வரப்போகும் குரு பெயர்ச்சி நல்ல பலனை கொடுக்க இருப்பதினால் கர்மாவினால் ஏற்பட்டிருக்கும் இந்த நோய் இன்னும் மூன்று மாதத்திலிருந்து படிப்படியாக குறையத்துவங்கி விடும்

]இருந்தாலும் குழந்தை தற்போது அனுபவிக்கும் வேதனையிலிருந்து விடுபட ஒரு எளிய வழிமுறை இருக்கிறது அந்த வழிமுறை நமது சித்தர்களால் நமக்கு சொல்லப்பட்டதாகும் அதை பின்பற்றினால் குழந்தையின் கஷ்டம் ஓரளவு குறைய ஆரம்பிக்கும்

அதாவது நூறு கிராம் ஓமத்தை லேசாக இடித்து அரை லிட்டர் தண்ணீரில் காய்ச்சவும் அது நூறு மில்லி அளவு வற்றியவுடன் வடி கட்டி அரைலிட்டர் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி பதம் வந்ததும் இறக்கி வைத்து ஐம்பது கிராம் கற்பூரத்தை பொடிசெய்து கலக்கி வைத்து கொள்ள வேண்டும் 
குழந்தைக்கு மூச்சிறைப்பு மற்றும் சளி தொல்லை ஏற்படும் போது மேலே நான் சொன்ன எண்ணெயை மார்பிலும் முதுகிலும் போட்டு நன்றாக அழுத்தாமல் அனல் பறக்க தேய்த்துவிட வேண்டும் இது உடனடியாக நல்ல பலனை தரும் மேலும் இந்த எண்ணெய் ஆஸ்துமா நெஞ்சுவலி முதுகுவலி போன்றவைகளுக்கு நல்ல நிவாரணத்தை தரக்கூடியது

சித்தர்கள் குறிப்பிட்ட இந்த மருத்துவ முறையை பயன்படுத்தி பாருங்கள் இப்போது கிரகங்கள் நல்ல நிலையில் வர ஆரம்பித்து இருப்பதினாலும் இந்த மருந்தின் வேகத்தாலும் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

Saturday, February 4, 2012

நம்பிக்கை இல்லாதவரும் கடவுளைக் காணலாம்...!

பிரணாயாமம் என்ற மூச்சு பயிற்சி ஆரோக்கியமான வாழ்கைக்கு சிறந்தது என்று கேள்விப்படுகிறோம்

 அதை செய்யும் முறையை குரு மூலம் தான் அறிய வேண்டும் என்பதும் நமக்கு தெரியும்

அந்த பயிற்சியை செய்ய துவங்கும் முன் அதை எப்போது செய்ய வேண்டும் அதற்கான உணவு கட்டுப்பாடு ஏதேனும் உண்டா என்பதை அறிந்து கொண்டால் நம்மால் ஆகுமா ஆகாதா என்று முடிவு செய்யலாம் என சிலர் நினைக்கிறார்கள்

மூச்சு பயிற்சி என்பது ஆயுள் காலத்தை நீட்டிக்கும் ஒரு முயற்சி மட்டுமல்ல வாழும் காலம் எவ்வளவு ஆனாலும் அதில் ஆரோக்கியமாக இருக்கும் வழியேயாகும்.

  முறைப்படி மூச்சு பயிற்சியை காலை மாலை இரு வேளைகளில் தான் செய்ய வேண்டுமென யோக நூல்கள் சொல்லுகின்றன

  சூரிய உதய நேரத்திலும் மறையும் வேளையிலும் தரையில் பத்மாசனம் இட்டு அமர்ந்து முதுகு தண்டுவடம் நேராக நிற்பது போல் நிமிர்ந்து அமர வேண்டும்.

  புலித்தோல், மான்தோல் போன்ற விரிப்புகளை தான் பயன்படுத்த வேண்டும் என்பது கிடையாது.

  பருத்தி மற்றும் கம்பளி துணிகளையும் பயன்படுத்தலாம்.  தர்ப்பையால் ஆன பாய் சிறந்தது ஆகும்.

 நாம் மூச்சு பயிற்சி செய்கின்ற அறையில் நமக்கு பிடித்தமான கடவுள் படங்களை வைத்து கொள்ளலாம்.

 கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் இயற்கை காட்சி படங்களை வைக்கலாம். இந்த பயிற்சி கடவுள் நம்பிக்கை இல்லாதவனை கூட கடவுளிடம் அழைத்து செல்லும்

 மிக முக்கியமாக அந்த அறை காற்றோட்ட வசதி உள்ளதாகவும், வெளிச்சம் வர கூடியதாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும்.

 
ஊதுபத்தியோ அல்லது மற்ற வாசனை பொருட்களோ உபயோகப்படுத்த கூடாது.  அந்த நேரத்தில் மனிதர்களின் நடமாட்டமும் செல்லப் பிராணிகளின் அருகாமையோ கூடாது.  அதிகமா ஒளியும் அங்கு வர கூடாது.   மனதை கூடியமானவரை அலைய விடாமல், கண்களை மென்மையாக மூடி நிதானமாக அவசரமே இல்லாமல் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.
  இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது நேற்று ஒரு நேரம் இன்று ஒரு நேரம் என நமது விருப்பப்படி பிராணாயாமம் செய்யும் நேரத்தை வைத்துக் கொள்ள கூடாது.

  தினசரி மிக கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட நேரத்தை கடைபிடிக்க வேண்டும்.
  சத்தமாக பேசுதல் வன்மையான வார்த்தைகளை பயன்படுத்துதல் கூடாது. 
 கூடியமான வரை மனதை காம வசப்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். 
 பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி சாதத்துடன் சிறிது நெய், பருப்பு கலந்த உணவை அரை வயிற்றுக்கு எடுத்து கொள்ள வேண்டும்.

 கால் வயிற்றுக்கு நீரும், மீதம் வயிறு காற்றாலும் நிரம்பியிருக்க வேண்டும்.  
உணவு சாப்பிட்ட சிறிது நேரம் கழித்து வாழை பழம் மாம்பழம், ஆரஞ்சு பழம், சீத்தா பழம் ஆகிய பழங்களில் எதாவது ஒன்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

  வயிறு நிறைவாக இருக்கும் போதோ, பசியோடு இருக்கும் போதோ மூச்சு பயிற்சி செய்யக் கூடாது.

  மல ஜலம் கழித்த பிறகு குளித்து முடித்தே இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

 இப்படி செய்பவர்கள் இடத்தில் பெரிய நோய்கள் எதுவும் வராது. 

Friday, February 3, 2012

மூன்றாவது கண்ணை திறக்கும் சக்கரம்!

உலக அன்னையின் திருவுருவத்தை சனாதனமான இந்து மதத்தின் சாக்த பிரிவு மூன்று நிலையாக வகைப்படுத்துகிறது முதலில் ஸ்தூல வடிவம் இரண்டாவது சூட்சம வடிவம் மூன்றாவது காரண வடிவம் என்பதாகும் ஸ்தூல வடிவம் என்பது பாசம் அங்குசம் கரும்பு வில் மலர் அம்பு ஆகியவற்றை கொண்டு இடது பாதத்தை ஊன்றியும் வலது காலை மடித்தும் அமர்ந்திருக்கும் திருக்கோலமாகும் காரண வடிவம் என்பது ஸ்ரீ அன்னையின் மூல மந்திர ஒலிவடிவமாகும் சூட்சம வடிவம் என்பது புகழ் பெற்ற ஸ்ரீ யந்திரம் என்ற ஸ்ரீ சக்ர வடிவாகும்.

மோகினி ஹிருதயம் எனும் நூல் ஸ்ரீ சக்ர வடிவை பற்றி மிக எளிமையாகவும் தெளிவாகவும் பல விவரங்களை நமக்கு தெரிவிக்கிறது இந்த நூலை வாமகேஷ்வர தந்திரம் என்று வேறொரு பெயராலும் அழைக்கிறார்கள் இதில் தந்திர மார்க்கம் சார்ந்த உபாசன முறைகள் விவரிக்கப்பட்டுள்ளது ஸ்ரீ சக்ரம் என்பது பிரபஞ்சவெளியில் எங்கும் வியாபித்துள்ள பரம்பொருளின் தன்மையை ஒருமை பாட்டை விளக்குவதே ஆகும் இந்த விளக்கத்தை ஒவ்வொரு மனிதனும் நன்கு விளங்கிகொள்ள ஒன்பது நிலைகளை கடந்து செல்ல வேண்டும் அதாவது மனிதனுக்கும் பிரம்மத்திற்கும் இடையில் ஒன்பது மறைப்புகள் உள்ளன இந்த் மறைப்புகளை ஸ்ரீ சக்ர தத்துவம் ஒன்பது ஆவரணங்கள் என்று பெயரிட்டு அழைக்கிறது


ஸ்ரீ சக்ரம் என்பது எல்லை இல்லாத பிரபஞ்சத்தை குறிப்பதாகும் அண்டவெளிக்கு துவக்கமும் கிடையாது முடிவும் கிடையாது அப்படி பட்ட அண்டத்தின் ரகசியத்தை மனித அறிவால் எக்காலத்திலும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது அப்படி முடியாத விஷயத்தை அறிந்து கொள்ள அக்கால ரிஷிகளும் முனிவர்களும் முயற்சித்து கண்டறிந்த மெய்ஞான ரகசிய வடிவமே ஸ்ரீ சக்ரமாகும் இதை ஒரு பிரபஞ்ச கணித கண்டுபிடிப்பு என்றும் சொல்லலாம்

ஒரு புள்ளிக்கு 360 பாகைகள் உண்டு ஒவ்வொரு தனித்தனி பாகையில் இருந்து புறப்படும் கோடுககள் பிரபஞ்சவெளியில் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே கொண்டே செல்லும் அந்த கோடுகள் அனைத்தும் ஒரே இடத்தில் அதாவது புறப்பட்ட இடத்திலேயே வந்து சேர்வதால் வட்டமாகவோ கோளமாகவோ தோற்றம் அளிக்கும் அந்த வடிவத்தை இரண்டு பாகமாக பிளந்தால் 180 பாகைகள் கொண்ட அரைவட்டம் கிடைக்கும் நான்காக பகிர்ந்தால் ஒவ்வொரு பகுதிக்கும் 90 பாகைகள் பிரிந்து நான்கு துண்டுகளாக விரிவடையும் இப்போது அந்த தோற்றத்தை பார்த்தால் ஒரு கூட்டல் குறியை போல நம் கண்ணுக்கு தெரியும் இது தான் சிவ சக்தி ஐக்கியத்தின் வெளிப்பாடாக அமையும் அது தான் பிரபஞ்சத்தின் அக்ஷர வடிவாகும்

இந்த அக்ஷர வடிவம் க என்ற எழுத்தாக அமைந்திருக்கிறது இந்த எழுத்து வடிவம் தான் படைப்பு தத்துவத்தின் வெளிப்புற சின்னமாகும் எல்லையே இல்லாத பிரபஞ்சம் க வடிவ சதுரத்துக்குள் காணப்படுகிறது இந்த சதுரத்தில் அணிமா லகிமா,மகிமா பிரத்தி பிராம வசித்துவம் சத் சித்துவம் என்ற அஷ்டமா சித்துகள் அடங்கியிருந்து ஆட்சி செய்கிறது இந்த சகரத்தில் உள்ள நான்கு புற சதுர ரேகைகளும் அண்ட வெளியை காவல் செய்யும் லோக பாலகர்களாக உருவகப்படுத்தப்பட்டு நிர்மானிக்கப்படுகிறார்கள் இச்சக்கிரத்தின் உள் வரிகளில் காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாச்சரியம் ஆகிய ஆறு குணங்களை கட்டுப்படுத்தும் பண்பு மற்றும் அறிவு ஆகிய இரண்டு நற்குணங்கள் மறைந்துள்ளன இதை பிரகட யோகினிகள் என்று அழைக்கிறார்கள்

நிலையான பார்வையை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்தால் வட்டத்திற்குள் சதுரம் தோன்றும் ஸ்ரீ சக்ர சதுரத்திற்குள் இதே போன்று தான் வட்டம் தோன்றுகிறது இது நமது கண்களில் உள்ள கருவிழிகள் போல் தெரிவதால் அண்டத்தின் ஒத்தைக் கண் எனவும் சுதர்மம் என்னும் அண்ட கருவாகவும் கருதப்படுகிறது சதுரம் என்பது ஆகாச வெளியினையும் வட்டம் என்பது ஆகாச காலத்தையும் குறித்து நிற்கிறது வெளி என்ற சதுரம் வளர்ந்து கொண்டே செல்கிறது காலம் என்ற வட்டம் சுழன்று கொண்டே செல்கிறது பார்வையை இன்னும் சற்று கூர்மை படுத்தி வட்டத்தை பார்த்தோம் என்றால் வட்டத்திற்குள் வட்ட வட்டமாக மூன்று வட்டங்கள் தோன்றும் இதில் இந்திரன் அக்னி எமதர்மன் நிருதிதேவன் வருணன் வாயு குபேரன் ஈசானன் ஆகிய எட்டு திக்கின் அதிபதிகள் நிற்கிறார்கள் ஒரு சதுரத்தில் அதற்குள் இருக்கும் வட்டத்தை அதாவது சதுரமான அண்டவெளியும் அதற்குள் இருக்கும் பூகோளத்தையும் எட்டு பாகமாக்கி அஷ்டதிக்கிலும் பிரபஞ்சம் பறந்து விரிந்துள்ளதை ஸ்ரீ சக்ர குறியீடுகள் காட்டுகின்றன

ஸ்ரீ சக்ரத்தின் வட்டத்தில் உள்ள நடுவட்டம் அகமுகமான வழிபாட்டால் பெருகக்கூடிய கொல்லாமை வெகுளாமை புலனடக்கம் பொறுமை தவம் வாய்மை அன்பு ஆகிய நற்குணங்களை வரிசைபடுத்தி காட்டுகிறது அதற்கு அடுத்த வட்டத்திற்குள் மனிதனின் 360 சுவாச கூறுகளான காலம் நிற்கிறது இந்திய நாள்கணக்கு படி ஒரு நாளைக்கு அறுபது நாழிகைகள் உண்டு ஒரு நாழிகையில் அதாவது 24 நிமிடத்தில் ஒரு மனிதன் விடும் சுவாசத்தின் எண்ணிக்கை 360 இந்த 360தை 60 நாழிகையால் பேருக்கும் போது சராசரியாக ஒரு மனிதனின் தினசரி சுவாசம் 21.600 ஆகும் ஒவ்வொரு நாழிகைக்கான 360 சுவாசத்தை பாகங்களாக கொண்டோம் என்றால் அது ஒரு வட்டமாக வரும் இந்த பாகம் காலத்தை குறிப்பதாகும் இந்த காலம் என்னும் உள் வட்டம் கிருதயுகம்(அ) திருதயுகம் (அ) திரேதாயுகம் 2. திரேதாயுகம் 3. துவாபரயுகம் 4. கலியுகம் ஆகிய நான்கு யுகங்களாக சுழன்று வருகிறது இப்படி வட்டமும் சதுரமும் அண்டவெளியாகவும் காலமாகவும் விளங்கி மூலாதாரத்தில் கனலாக வடிவெடுக்கிறது இதை நெருப்புக்குள் நெருப்பு அல்லது சிவத்துக்குள் சக்தி அல்லது சகதிக்குள் சிவம் என்றும் சொல்லாம் இந்த மூன்றாவது வட்டத்தில் பத்து இதழ் கொண்ட தாமரை ஸ்ரீ சக்ரத்தில் மலர்கிறது
பதினாறு இதழ்கள் பிறக்கும் சக்ர பகுதியை சர்வ பரிபுரா சக்ரம் என்ற அழைக்கிறார்கள் இந்த ஒவ்வொரு இதழ்களிலும் அன்னையின் பதினாறு யோகினி சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது இந்த சக்திகள் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் தேவதைகள் ஆவார்கள் யோக நெறியில் இந்த பகுதி சுவாதிஷ்டானம் என்று அழைக்கப்படுகிறது இதில் மனம் சித்து சித்தம் அகங்காரம் ஆகிய நான்கு அந்தகரணங்களும் பார்த்தல் கேட்டல் நுகர்தல் சுவைத்தல் உரைத்தல் நினைவு வைத்தல் கனைத்தல் சூட்சமம் சுக்குலம் காரணம் பெயர் வளர்ச்சி ஆகிய பனிரெண்டு தன்மாத்திரைகள் அடங்கியுள்ளன இத்தகைய பதினாறு இயல்புகளும் நிரம்பி இயங்கினால் தான் உலக வாழ்க்கைக்கு தேவையான உடல் நலம் மனநலம் அறிவு நலம் பண்பு நலம் சமூக நலம் பொருள் நலம் ஆகிய பெயர்கள் கிடைக்கும் அதனால் தான் இப்பகுதியை படைத்தல் தத்துவம் என்கிறார்கள்

அடுத்ததாக பதினாறு இதழ் தாமரைக்குள் எட்டு இதழ் கொண்ட மூன்றாவது ஆபரணம் பிறக்கிறது இது சர்வ சம்மோகன சக்ரம் என்ற பெயர் கொண்டதாகும் எட்டு இதழ் கமலத்தில் எட்டு யோகினிகள் உள்ளதோடு அனங்க மன்மதன என்ற சக்திகளும் அருளாட்சி செய்கின்றன அனங்க என்றால் உருவம் இல்லாதது என்ற பொருள் வரும் அதனால் இந்த பிரபஞ்சமானது உருவம் இல்லாத பரப்ரம்மத்தில் இருந்து உதயமானது என்ற மூல கருத்து வெளிப்படுகிறது மேலும் இந்த எட்டு இதழ்களும் எட்டு பிரம்மாணங்களாகும் மேலும் இந்த சக்ரம் மனித உடலின் சதை பகுதியை குறிக்கிறது


அடுத்ததாக உள்ள நான்காவது ஆவரணத்தில் கீழே எழும் மேலே ஏழும் ஆக பதினாறு உலகங்கள் அமைந்துள்ளன இதை சர்வ செளபாக்கிய தயகச்சக்கரம் என்று அழைக்கிறார்கள் மேலே உள்ள ஏழு கோணத்தில் பூர் பூவ சுவ ஜன தப சக்திய ஆகிய ஏழு உலகங்களையும் கீழே உள்ள ஏழு கோணங்கள் அதல விதல சுதல நிதல ரசாதல மகாதல பாதாள ஆகிய ஏழு உலகங்களையும் காட்டுகிறது அது மட்டும் அன்றி ஒலித்தத்துவமான சட்ஜமம் சமம் காந்தாரம் மத்திமம் பஞ்சமம் தைவதம் விவாதம் ஆகிய ஏழு சப்த லயங்களையும் ஊதா கருநீலம் நீலம் பச்சை மஞ்சள் ஆரஞ்சி சிவப்பு ஆகிய நிறதத்துவங்களையும் காட்டுகிறது அதாவது இறை சக்தி ஓசையாகவும் ஒளியாகவும் இருப்பதை இந்த கோணங்கள் விளக்குகின்றன

ஐந்தாவது ஆவரணமான சர்வார்த்த சாதக சக்கரத்தில் கீழே ஐந்து கோணமும் மேலே ஐந்து கோணமும் உள்ளது இந்த பத்து கோணங்களும் மனித உடலில் உள்ள தச வாயுக்களை குறிக்கிறது ஸ்ரீ அன்னையை வழிப்படும் தசமகாவித்தியா தோற்றங்களை இது காட்டுவதாகவும் அமைந்துள்ளதாக கூறலாம் மேலும் மேலே உள்ள ஐந்து கோணங்கள் சரஸ்வதி லஷ்மி கெளரி மகேஸ்வரி மனோன்மணி என்ற அன்னையின் பஞ்ச வடிவங்களையும் கீழே உள்ள ஐந்து கோணங்கள் தத்புருஷம் சத்யோஜாதம் அகோரம் வாம தேவம் ஈசானம் ஆகிய ஈஸ்வர பஞ்சப்ரம்ம வடிவத்தையும் காட்டுகிறது

தேவியை வழிபடும் சர்வசோமணி சர்வவிக்ஷிரவினி சர்வாஷ்ணி சர்வசந்தசர்வேசினி மாதினி சர்வமகோரங்குசா சர்வகேச சர்வபிகம்ப சர்வயோனி சர்வதிகண்டா ஆகிய பத்து மூர்த்திகளையும் இந்த கோணங்கள் காட்டுகின்றன இதே போல அன்னமய கோசம் ஞானமய கோசம் மனோமய கோசம் விஞ்ஞானமய கோசம் ஆனந்தமய கோசம் என்னும் ஐந்து உடல்களையும் அந்த உடல்களை தாக்கும் தோஷங்களான பொய்யாமை கொல்லாமை கள்ளுண்ணாமை திருடாமை காமியாமை ஆகிய ஐந்து நெறிகளை சுட்டிக்காட்டுகிறது இப்பகுதி விந்து அணுக்களையும் கருமுட்டைகளையும் காட்டுவதாக தாந்திரிக தத்துவம் காட்டுகிறது

ஆறாவது ஆவரணமான சர்வஞசக்கரம் ஆஞ்சாசக்கரம் என்று அழைக்கப்படுகிறது இது உருவவழிபாட்டின் விளக்கமாகும் அன்னையானவள் சர்வத்தையும் அருளும் மூர்த்தியாகவும் திகழ்கிறாள் சர்வத்தையும் அழிக்கும் சக்தியாகவும் திகழ்கிறாள் உடல் இயக்க ரீதியில் இந்த ஆவரணம் எழும்பில் உள்ள மட்சையை குறிக்கும்

சர்வரோகர சக்கரம் என்ற ஏழாவது ஆவரணம் பிந்துவை குறிப்பதாகும் இதில் எட்டு கோணங்கள் உண்டு இக்கோணங்கள் வசினி காமேஸ்வரி மோதினி விமலா அருணா ஜெயினி சர்வேஸ்வரி கெளலனி ஆகிய வித்தைக்கும் ஞானத்திற்கும் உரிய தேவதைகள் வாசம் செய்கிறார்கள் இந்த அஷ்ட கோணத்தின் அதிதேவதை திரிபுரா ஆவாள் யோகமார்க்கத்தில் கூறப்படும் இயமம் நியமம் ஆசனம் பிரணாயமம் பிரத்தியாகாரம் தாரணை தியானம் சமாதி ஆகிய எட்டு நிலைகளும் இதில் அடங்குகிறது

மேலும் நூல்களை கற்றுத்தரும் போத குரு பேதங்களை அறிய செய்யும் வேதகுரு மந்திர சித்தி பெற வழிகாட்டும் மிசிதகுரு செயலுக்கம் தரும் சூட்ச்சக குரு வார்த்தைகளால் ஞானத்தை போதிக்கும் வாசககுரு தான் பெற்ற ஞானத்தை சுயநலம் இல்லாமல் சீடருக்கு தரும் காரககுரு முத்தியடைய வழிகாட்டும் விஷிதககுரு ஆகிய அஷ்டகுருக்களையும் இக்கோணங்கள் உணர்த்துகின்றன 
அன்னை ஆதிபராசக்தியின் நான்கு திருகரங்களும் அந்த கரங்களில் இருக்கும் பாசம் அங்குசம் கரும்பு வில் மலர் கணை ஆகிய நான்கு கருவிகளும் இந்த எட்டு கோணத்தின் வடிவங்கள் எனலாம் இதில் பாசம் என்பது ஆசையின் வடிவம் அங்குசம் என்பது கோபத்தின் வடிவம் கருப்பு வில் என்பது மனதின் வடிவம் மலர் கணை என்பது உணர்வுகளின் வடிவம்

எட்டாவதாக உள்ள ஆவரணம் முக்கோணமாக அமைந்த காயத்திரி பீடமாகும் அன்னை இந்த காயத்திரி பீடத்தில் திரிபுராம்பா என்ற திருநாமத்தோடு அமர்ந்திருக்கிறாள் காமேசி வச்சிரேசி பகமாலினி என்ற மூன்று தேவதைகளையும் முக்கோணத்தில் ஒவ்வொரு பகுதியிலும் நிறுத்தி உள்ளாள் மனிதனை கடைநிலைக்கு தள்ளுகின்ற ஆணவம் கர்மா மாயை என்ற மும்மலங்களும் இச்சக்கரத்தை பூஜிப்பதினால் எரிந்து சாம்பலாகி விடுகிறது

சுழன்றடிக்கும் சூறாவளி என்ற பேராசை அடங்கி விடவும் ஆயிரம் இடர்பாடுகள் வந்தாலும் அனைத்தும் தவிடு பொடி ஆகிவிடவும் வயிரக்கியத்தை பெறவும் சம்சார சாகரத்தில் உழன்று கொண்டிருக்கும் மனமென்னும் மாய பிசாசை வசக்கி ஒடுக்கி அன்னையின் திருபாதத்தில் பூர்ண சரணாகதி அடைய செய்யவும் இச்சக்கரம் வழிவகுக்கும்

இறுதியாக சர்வானந்த மயசக்கரம் என்ற ஒன்பதாவது ஆவரணம் ஸ்ரீ சக்ரத்தின் மைய புள்ளியான பிந்து மையமாகும் இது பேரானந்தம் அடையக்கூடிய அம்பிகையின் திருகாட்சியை நேருக்கு நேராக தரிசிக்கும் நிலையை காட்டுகிறது அம்மையும் அப்பனும் இந்த பிந்து பகுதியில் ஒன்றாக இணைந்து நிற்கிறார்கள் இன்பம் துன்பமற்ற ஆழ்ந்த சமாதி நிலை பிந்து பகுதி காட்டும் சின்னமாகும் யோக மார்க்கத்தில் சொல்லப்படும் சமாதி நிலையின் மூன்றவது கண் திறக்கும் அனுபவமே ஸ்ரீ சகரத்தில் உள்ள மூல பிந்தாகும் 
இது வரையில் தாய்தெய்வ வழிபாட்டின் ஆழ்ந்த கருத்துக்களை சுருக்கமாக சிந்தித்தோம் இனி நமது இந்து மதத்தில் உள்ள மற்ற பிரிவுகளையும் சற்று ஆழ்ந்து சிந்திப்போம். 

Thursday, February 2, 2012

சாதம் பிரசாதம் ஆவது எப்படி...?

உறவினர் வீட்டுக்கு போனால் எங்கள் சொந்தகாரரை பார்த்துவிட்டு வருகிறோம் என்கிறார்கள்

 ஆனால் ஆலயம் சென்று வந்தால் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகிறோம் என்று சொல்கிறார்கள்

 அது எப்படி மனிதனை பார்த்தால் வெறும் பார்வை என்றும் சுவாமியை கண்டால் தரிசனம் என்றும் ஒரே செயலை இரு வார்த்தைகளில் அழைக்கிறோம்?

 உண்மையில் தரிசனம் என்பது என்ன?  கோபுரத்தையோ, கொடி மரத்தையோ அல்லது வேறு தெய்வீக பொருட்களையோ தூரத்திலிருந்து காண்பது கூட எப்படி தரிசனமாகும் என்று பலருக்கு குழப்பம் வரும் 


அரிசியை கழுவி பாணையில் இட்டு வேக வைத்தால் அது சாதம் தான். 
 அதில் என்ன புனிதத்தன்மை வந்து திடீர் என பிரசாதம் ஆகிவிடுகிறது?

  கடவுளுக்கு மனபூர்வமாக அர்பணிக்கும் போது சாதாரண குழாங்கல் கூட சாளக்கிராம கல்லாகி விடுகிறது அது போல சாதாரண சாதமும் அன்போடு படைக்கும் போது பிரசாதமாகி விடுகிறது 

 ஒரு பொருளை வெறும் கண்ணால் பார்ப்பது திருஷ்டி மட்டும் தான். அதையே பக்திபூர்வமாக பார்ப்பது தரிசனமாகும்.

Tuesday, January 31, 2012

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என சொல்லுவது ஏன் ?


விண்வெளியில் சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் இடையே அமைந்துள்ளது, புதனின் பயணப்பாதை. ராசிச் சக்கரத்தில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் பின்வீட்டில் தென்படுவான், புதன் பகவான். மிதுனமும் கன்னியும் அவன் இருக்கும் இடங்கள், கன்னியில் உச்சம் பெற்றிருப்பதால், அவனது பலம் வலுத்திருக்கும். மிதுனம் என்றால் இருவர்; அதாவது... இணைந்த இருவர் என்று பொருள் உண்டு. நாகரிக மனித இனத்தின் வெளிப்பாடு, மிதுனம். அது முதிர்ச்சி அடைந்த நிலையைச் சுட்டிக்காட்டுவதே கன்னி. ஓடத்தில், கன்யகை கையில் பயிருடன் தென்படும் இயல்பு கன்னிக்கு உண்டு. சூரியனுடனும் (ஆன்மா) சந்திரனுடனும் (மனம்) சேர்ந்து காணப்படுவான், புதன். ராசிக் சக்கரத்தில் சூரியனுடன் இணையும் வேளையில், நிபுண யோகத்தைத் தரவல்லவன். புதன். எதிர்பாராத சிக்கலில் சிக்கிக்கொண்டாலும், 

எளிதில் வருவதற்கான சிந்தனையை, புத்திசாலித்தனத்தை அளிப்பான். புதன் என்றால், அறிதல், உள்வாங்கி உணர்தல் என்ற அர்த்தம் உண்டு (புத அவகமனே). உடலையும் உள்ளத்தையும் இணைப்பதில் புதனுக்குப் பங்கு உண்டு. ஆன்மிகத்தையும் உலகவியலையும் இணைக்கிற பாலமாகச் செயல்படுவான் புதன். மனம் நினைத்ததை புத்தி ஆராயும். அந்த வேலையை இறுதி செய்வதற்குப் புதன் தேவை. சந்திரனின் (மனம்) மைந்தனாக புதனைச் சித்திரிக்கிற தகவல், புராணத்தில் உண்டு. அதாவது, சந்திரனிலிருந்து வெளியானவன் புதன். மனத்தின் எண்ண ஓட்டத்துடன் நெருங்கிய தொடர்பு, புதனுக்கு இருப்பதையே இது உணர்த்துகிறது. 

புதன் என்றால், அறிஞர் என்கிற அர்த்தமும் உண்டு. உடலில் அணு அளவில் உள்ள மனம், புதனின் ஒத்துழைப்பில், தன்னுடைய எண்ணங்களை விரிவாக்கி, செயல்படுத்தி வெற்றிக்கு வழி வகுக்கிறது. சிந்தனை வளத்துக்கான அடித்தளம், புத்தி; அது, புதனுடன் இணைந்தே இருக்கும். நாகரிகமான சிந்தனையைத் தூண்டுபவனும், முதிர்ச்சி அடைந்த செயல்பாட்டுக்கு உரியவனும் புதனே ! அவன் வலுவிழந்தால், பாமரனாகச் செயல்படுவான்; வலுவுற்றால், அறிஞனாக விளங்குவான். கல்வியை முழுமையாகப் பெறுவதற்கு, புதனின் துணை அவசியம். வாழ்வின் வெற்றிக்கு ஆதாரமான அறிவு வளர்ச்சிக்கு, புதனின் பங்கு வலுப்பெற்றிருக்க வேண்டும். உலக சுகத்தை அடைவதற்குப் பணம் வேண்டும்; அதனை ஈட்டுவதற்கு உயரிய கல்வி வேண்டும்; 

அதனைப் பெறுவதற்கு, புதனின் ஒத்துழைப்பு தேவை. உயர்கல்வியானது பணத்தை மட்டுமே அளிக்கும். குறிப்பாக, இன்றைய சூழலில், உலக வாழ்வின் சுகத்தை அடைவதற்குப் பணத்தை ஈட்டித் தருமே தவிர, அறிவின் முதிர்ச்சியை அளிக்காது. ஆகவே, படிக்காத மேதைகள் தோன்றுவதற்கு புதனே காரணமாகிறான் !

இன்றைய கல்வியறிவு, பெரும்பாலும் தொழிலுடன் இணைந்து பணம் ஈட்டுகிற கருவியாகவே மாறிவிட்டது. அதை அளிப்பது மட்டுமின்றி, அறிவையும் அளிப்பவன், புதன் ! பேரறிவை, பெருஞானத்தை அடைவதற்கு, துறவறம் ஏற்பவர்களுக்கு புதனின் உறுதுணை அவசியம். அவனுக்கு ஸெளம்யன் என்ற பெயர் உண்டு. ஸோமன் என்றால் சந்திரன். அவனுடைய மைந்தன் என்றும் இதற்கு அர்த்தம் சொல்வர். பொதுவாக, மற்ற கிரகங்கள் யாவும் ஏனைய உடல் உறுப்புக்களுடன் தொடர்பு கொண்டிருக்கும். புதன் மட்டும், சந்திரனுடன் (மனம்) நெருங்கிய தொடர்பில் இருப்பவன் ! சூரியன், சந்திரன் ஆகிய இருவரது தொடர்பில் பலம் பெற்று, பிற கிரகங்கள் செயல்படுகின்றன. 

மற்ற ஐந்து கிரகங்களும் நட்சத்திர கிரகங்கள். அவற்றை, தாராகிரகங்கள் என்கிறது ஜோதிடம். ஆன்மாவாகிய சூரியனும், மனமாகிய சந்திரனும் வலுவாக இல்லையெனில், மற்ற கிரகங்கள் செயலற்றுவிடும்; புலன்கள் வேலைசெய்யாமல் நிலைத்துவிடும். எனவே சூரிய சந்திரருக்கு, ஜோதிர்கிரகம் எனும் அந்தஸ்து உண்டு. மனமானது நினைக்க வல்லது; புத்தி ஆராய வல்லது; அத்துடன், அதற்குத் தகுந்தபடி உத்தரவிடவும் செய்யும்; புலன்கள் அதன்படி செயல்படும், புதனுடன், வளர்பிறை சந்திரன், சுக்கிரன், குரு ஆகியோர் இணைந்தால், சிந்தனை வளம் பெருகும்; சிந்தனையில் தடங்கல் இருக்காது; வெற்றியும் மகிழ்ச்சியும் தேடி வரும். சனி, செவ்வாய், ராகு - கேது ஆகியோர் இணைந்தால், தனது வலிமையை இழப்பான் புதன்; தவறான சிந்தனைகளால், சங்கடத்தைச் சந்திக்கச் செய்வான். சூரியனுடன் நெருக்கமாக இருப்பின், நிபுண யோகத்தை அளிப்பான். 

ஆனாலும், மிக நெருங்கிய நிலையில், மௌட்யம் பெற்று, அதாவது செயல்படும் தகுதியை இழந்து, விபரீத பலனைத் தந்து விடுவான். புதன். அஸ்தமனமானால், அதாவது சூரிய ஒளியில் தென்படாமல் இருப்பின், செயல்பட மனமிருந்தும் இயலாத நிலைக்குத் தள்ளுவான். இதனால்தான், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பர். முன்னோர், அதாவது, பொன் குவிந்திருப்பினும், அறிவ பெருகுவது அரிது ! செல்வந்தர்கள் பலருக்கு அறிவுரை வழங்க, அறிவாளிகள் தேவைப்படுவது உண்டு. பணத்தைப் பல வழிகளிலும் ஈட்டலாம்; அதனைத் தக்கவைத்துக் கொள்ள அறிவு தேவை. அதற்கு, ராசிச் சக்கரத்தில் புதன் வலுவுற்றிருக்க வேண்டும். செவ்வாயுடன் இணைந்தால், ரஜோ குணத்தின் சேர்க்கையால், சிந்தனை திசை திரும்பும் விரும்பத்தகாத விளைவுகளுக்குக் காரணமாகி விடுவான்,

 புதன் ! சனியுடன் இணைந்திடின், மெத்தனத்துடன் இருக்கச் செய்து, அறிவிருந்தும் பாமரன்போல் செயல்பட வைப்பான். சனி, புருஷத்தன்மை கலந்த அலி; புதன், பெண்மை கலந்த அலி என அவர்களின் தரம் குறித்து விவரிக்கிறது ஜோதிடம். ஆகவே, அவர்களின் சேர்க்கை, இரண்டும் கெட்டான் பலத்தையே வழங்கும் என உறுதி செய்கிறது. அதேபோல், ராகு - கேதுவோடு இணைந்தாலும் நற்பலனை அளிக்கமாட்டான், புதன். ஏனெனில், இந்தக் கிரகங்களை நிழல்கிரகம் என்கிறது ஜோதிடம் (சாயா கிரஹ). அதாவது, இருள், அறியாமை என்று அர்த்தம். இருளில் மறைவதும், அறியாமை ஆட்கொள்வதும் செயல்பாட்டையே முடக்கிவிடும் அல்லவா ?!

புதன், சுபக்கிரகம். ஆனால், பாபக் கிரகத்துடன் இணைந்தால், பாவியாக மாறுவான் என்கிறது ஜோதிடம். அப்படித்தான், அறிவானது, துஷ்டனுடன் இணையும் போது மங்கிவிடும். நல்லவனுடன் இணைய... துளிர்விட்டு மிளிரும், ஆசை, கோபம், அறியாமை, அகங்காரம், அசூயை ஆகிய அனைத்தும் மனதில் இணைந்திருக்கும்; அன்பு, பண்பு, உண்மை, சகிப்புத்தன்மை, அடக்கம், இரக்கம் ஆகிய நற்குணங்களும் மனதுள் இருக்கும். புதன் வலுப்பெற்றால், துர்குணங்களை அடக்கி, நற்குணங்களை வளர்க்கும்; 

சிந்தனைத் தரத்தை உயர்த்தும்; நல்ல குடிமகனாக மாறச் செய்யும். புதன், மற்ற கிரகங்களுடன் சேராமல், மிதுனத்திலோ கன்னியிலோ வீற்றிருக்கும் வேளையில், எதிர்மறையான பலனைத் தருவான் என்கிறது ஜோதிடம். தனுர் லக்னம் அல்லது மீன லக்னம்; புதன்.. மிதுனம் அல்லது கன்னியில் வீற்றிருந்தால், கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகும்; இதனால் விபரீத பலனே கிடைக்கும் என்பர். தனுர் லக்னமானால், ஏழிலும் பத்திலும் இருக்கிற புதனுக்கு, கேந்திராதிபத்ய தோஷம் உண்டு. மீனமெனில், நான்கிலும் ஏழிலும் அந்தத் தோஷம் இருக்கும். நாலு கேந்திரங்கள் இருந்தாலும், 4-வது கேந்திரத்தில் இருக்கிற புதன், உலக சுகத்தால் கிடைக்கிற மகிழ்ச்சியை இழக்கச் செய்வான்; மற்ற கேந்திரங்களின் பலனை இழக்க வைக்கமாட்டான் எனும் விளக்கமும் ஜோதிடத்தில் உண்டு, புதனானவன், அறிவு வழிச் சுகத்தை அடையவும் செய்வான்; இழக்கவும் வைப்பான். காலத்தின் அளவுகோலான ஒரு வாரத்தின் நடுநாயகமாக வீற்றிருப்பவன், 

புதன். மனதில் படிந்த அழுக்கு மற்றும் உடலில் தென்படும் அழுக்கு ஆகியவற்றை அகற்ற, புதன்கிழமை சிறந்தது என்கிறது சாஸ்திரம். முடியும் நகமும் உடலின் கழிவுப் பொருட்கள் என்கிறது ஆயுர்வேதம். மஜ்ஜை, எலும்பு இவற்றின் கழிவுகள் என்றும் தெரிவிக்கிறது. அந்தக் கழிவுகளை அகற்றுவதற்கு, புதன் கிழமையைப் பரிந்துரைக்கிறது தர்மசாஸ்திரம். அதனால்தான், அந்தக் காலத்தில் புதன்கிழமையன்று க்ஷவரம் செய்துகொள்வார்கள். (குர்வீத் புத சோமயோ:). ஆண்கள், எண்ணெய் தேய்த்துக் குளிக்க, புதன் கிழமையையே தேர்ந்தெடுக்கும் சம்பிரதாயமும் உண்டு. எண்ணெய் தேய்த்துக் குளித்தால், உடல் அழுக்கு அகன்றுவிடும். தற்காலச் சூழலால் அது விலக்கப்பட்டாலும் அதன் பெருமை குன்றிவிடாது.

பூர்வஜென்ம வினைக்குத் தக்கபடி, பிறக்கும் வேளை அமையும். வினையின் முழு உருவத்தை ஜாதகத்தில், வீடுகளில் அமர்ந்த கிரகங்கள் விளக்கும். புதன் வலுவுடனும், மற்ற கிரகங்களின் தாக்கத்தால் வலுவிழக்காமலும் இருந்தால், அதனால் விளைகிற நற்பயன்கள் யாவும் முன் ஜென்ம புண்ணியத்தின் சேமிப்பு என அறியலாம். கிரகங்களின் கூட்டுப்பயன் தான் நடைமுறைக்கு வரும். ஆகவேதான், வீடுகளுக்கு ராசி என்றால் கூட்டம் என்று அர்த்தம், நெற் குவியலை தான்ய ராசி என்றும், பணக் குவியலை தன ராசி என்றும் சொல்வர். தனியொரு கிரகம், மற்ற கிரகங்களின் தாக்கத்தை முறியடித்துப் பலன் தராது. அவற்றுடன் இணைந்து, சிறு மாறுபாட்டுடன் தனது பலனை நடைமுறைப்படுத்தும். 

முற்றும் துறந்த சில துறவிகள், அறிஞர்கள், பெரியோர்களிடம் சில அல்பத்தனங்களும் தென்படும். பெருமையில் இந்தச் சிறுமை புலப்படாது. ராசி புருஷனின் நாலாம் வீட்டுக்கும் ஆறாம் வீட்டுக்கும் உடையவனாகச் சித்திரிப்பதால், மகிழ்ச்சியின் இழப்பு, எதிரியின் தாக்கம் ஆகியவை நேரிட புதன் காரணமாகிறான். வலுப்பெற்ற புதனுக்கு, குரு மற்றும் செவ்வாயின் பார்வை சேர்ந்து வரும்போது, அறிவை வளர்க்க குரு உதவினாலும், செவ்வாய் அகங்காரத்தை அளித்து, அறிவை மங்கச் செய்வதும் நிகழும். அகங்காரம் வெளிப்படுகிற அறிஞர்களும் உண்டு. விவேகம் அகங்காரத்தை அழிக்க வேண்டும். ஆனால், செயல்படாது போய்விடும். புதனை வழிபட்டால், அகங்காரம் அழியும்; அமைதி கிடைக்கும். விவேகத்தைத் தரவல்லவன் புதன் பகவான்; அவனை வழிபட, விவேகம் வளரும் ! அடக்கமும் சகிப்புத்தன்மையும் இருந்தால் வளமான வாழ்க்கை நிச்சயம், பும் புதாய நம: என்று சொல்லி புதன் பகவானது திருவிக்கிரகத்துக்கு 16 உபசாரங்களைச் செய்யுங்கள். அல்லது, அதன் அதிவேதையான ஸ்ரீமந் நாராயணனை, நமோ நாராயணாய என்று சொல்லி, புதனை வழிபடுங்கள். இன்னலை அகற்றி, இன்பத்தை வழங்குவான் ! 

பஞ்சபூதங்களில், பூமியின் பங்கு புதனில் உண்டு. நம் உடலிலும் பூமியின் பங்கு உண்டு. ஆகவே, பூமித் தாயில் வழிபாடு, புதன் பகவானின் வழிபாடாக மாறிவிடும். சமுத்ரவஸனே ! தேவி ! பர்வதஸ்தன மண்டிதே ! விஷ்ணு பத்னி ! நமஸ்துப்யம் பாதஸ்பர்சம்க்ஷமஸ்வமே எனும் ஸ்லோகத்தை மனதாரச் சொல்லலாம்.

ஸெளம்ய ! ஸெளம்ய குணோபேத !
புதக்ரஹ மஹாமதே !
ஆத்மானாத்ம விவேகம் மே
ஜயை த்வத்பரசாதத:

- என்று சொல்லி வணங்கி, இயற்கையில் விளைந்த பொருட்களை புதனுக்கு அர்ப்பணிக்கலாம். புதன்கிழமை நன்னாளில், இப்படி மனதாரப் பிரார்த்தியுங்கள். ஆர்வத்துடன் விஸ்தாரமான பூஜையில் இறங்கவேண்டாம்; ஆடம்பரத்தில், பூஜை மூழ்கிப் போகும்; சோர்வு ஏற்பட்டு, ஒரே நாளில் பூஜை நின்றுவிடும். என்றென்றைக்கும் நடைமுறைப்படுத்தும் அளவுக்கு வழிபட்டால், தடங்கலின்றி பூஜையைத் தொடர முடியும். ஒருவேளை, பூஜைக்கு நேரம் கிடைக்காது போனால், மனதுள் புதன் பகவானது மூல மந்திரத்தையும் ஸ்லோகத்தையும் சொல்ல... மருத்துவரையும் தேட வேண்டாம்; ஜோதிடரையும் பார்க்க வேண்டாம் ! ஆரோக்கியமும் அமைதியும்தான், நாம் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிற சொத்து. அவை கிடைப்பதற்கு, புதன் பகவானை வணங்குங்கள்; வளம் பெறுவீர்கள்!

Saturday, January 21, 2012

கணவனை இழந்தவள் கெட்ட சகுனமா...?




சகுனங்களை பற்றி மிக தவறுதலான புரிந்துணர்வே நம் மக்கள் மத்தியில் நிலவுகிறது அதற்கு காரணம் சில சகுனங்கள் நன்மை என்றும் சில சகுனங்கள் தீமை என்றும் சொல்லப்படுகிறதே தவிர எதற்காக அது நன்மை எதற்காக அது தீமை தருகிறது என்று காரண காரிய விளக்கங்கள் எதுவும் சொல்லப்படுவது இல்லை

மனிதனுடைய அறிவு ஒரு செயலை செய்யாதே என்று தடை வருகின்ற போது அதை ஏன் செய்ய கூடாது என்று கேள்வி கேட்கும் அதாவது சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திர வேளையில் கிணறு வெட்டக்கூடாது என்று சொன்னால் ஏன் வெட்டக்கூடாது வெட்டினால் என்ன என்ற கேள்வியை அறிவு கேட்கும் அப்படி கேட்பதை யாரும் தவறு என்றோ அதிக பிரசங்கி தனம் என்றோ சொல்ல முடியாது

சித்திரை மாதத்தில் வெயில் அதிகமாக இருக்கும் ஈரப்பதம் இல்லாமல் மண் இறுகி போய்விடும் நிலத்தடி நீர் மிகவும் கீழே இறங்கி விடும் அதனால் அந்த நேரத்தில் கிணறு தோண்டப்படும் போது மிகவும் கடினமான வேலையாகவும் இருக்கும் நீர் ஊற்று கிடைக்காமலும் போய்விடும் என்று விளக்கம் சொல்ல வேண்டியது சித்திரை மாதத்தில் கிணறு தோண்ட கூடாது என்று சாஸ்திர வகுத்தவர்களின் கடைமையாகும்

நமது இந்திய சாஸ்திரங்கள் அனைத்துமே அனுபவங்களையும் விஞ்ஞான உண்மைகளையும் அடிப்படையாக கொண்டவைகள் ஆகும் உதாரணமாக மாலை நேரத்தில் வீடு வாசல் பெருக்கி தெளித்து எல்லாபுறத்து கதவுகளையும் திறந்து வைக்க வேண்டுமென்று சாஸ்திரம் சொல்கிறது அப்படி வைத்தால் மாகலக்ஷ்மியானவள் வீட்டுக்கு வருகை தருவாள் வீட்டை வறுமை அணுகாமல் பாதுகாப்பாள் என்றும் சொல்லப்படுகிறது இதன் உண்மை என்ன ?

மாலை நேர காற்று தெற்கு பக்கமாக இருந்து வீசும் தெற்கு திசையில் இருந்து வருகின்ற காற்று என்பதனால் தான் அது தென்றல் காற்று என்று அழைக்கப்படுகிறது அந்த தென்றல் காற்று வீட்டு முன்புறமாகவோ பின்புறமாகவோ அல்லது வேறு எந்த வழியாகவோ வீட்டிற்குள் வரவேண்டும் தென்றல் வீட்டுக்குள் வருவதனால் காலையில் இருந்து மாலை வரை உருவான வெப்பக்காற்று வெளியேறும் ஒரு புத்துணர்ச்சியான இனிய சூழ்நிலை வீட்டிற்குள் நிலவும் அப்போது அங்கே வசிக்கும் மனிதர்களின் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெரும் நற்காரியங்களை சிந்திக்கும் நற்க்காரியங்க்களை செயல்படுத்தும் நல்லதை மட்டுமே ஒரு மனிதன் செய்யும் போது அவனிடம் மகாலட்சுமி வராமல் வேறு எங்கு போவாள் !



ஆனால் இப்படி சில நடைமுறைகளுக்கு விளக்கம் சொன்ன நமது சாஸ்திர வல்லுனர்கள் சகுன சாஸ்திரத்திற்கு சரியான விளக்கங்கள் சொல்லாமல் போனது நமது துரதிஸ்டமே ஆகும் வல்லுனர்கள் சொல்லவில்லையே தவிர சகுன சாஸ்திரத்தில் பல இடங்களில் இலைமறை காயாக காரண காரியங்களை விளக்கி இருக்கிறார்கள்

உதாரணமாக கணவனை இழந்த மாது எதிரே வந்தால் நாம் போகும் காரியம் வெற்றி பெறாது என்று சகுன சாஸ்திரம் சொல்கிறது இதனுடைய உள்ளர்த்தம் என்வென்று தெரியாத சிலர் உடும்பு பிடியாக அதை பிடித்து கொண்டு எதிரே வருகின்ற விதவை பெண்ணை மனம் போன போக்கில் ஏசியும் பேசியும் விடுகிறார்கள் இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சில பகுத்தறிவு மாக புத்திசாலிகள் இந்து மத சம்பிரதாயங்கள் அனைத்துமே மனிதாபிமானம் அற்றவைகள் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்

உண்மையில் சகுன சாஸ்திரம் விதைகள் எதிர்படுவது கெடுதிஎன்று சொல்லவேண்டிய அவசியம் என்ன என்று யாரும் யோசிப்பது இல்லை அதை நம்புவர்கள் கூட அதற்கு சரியான விளக்கங்களை தருவது கிடையாது காரணம் அப்படி ஒரு விளக்கம் இருப்பதே அவர்களுக்கு தெரியாது

ஒரு பெண் கணவனை இழக்கிறாள் என்றால் அவள் ஜாதகத்தில் ராகு அல்லது கேது மிக பாதகமான நிலையில் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டும் தான் அவள் கணவனை இழந்து வாழும் பரிதாப நிலை ஏற்படும் ராகு கேதுக்கள் பாதகமான நிலையில் யார் ஜாதகத்தில் இருக்கிறதோ அவர்களிடம் இருந்து அந்த கிரகத்தின் தீய கதிர்வீச்சு வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் அப்படி வெளிப்படும் நுண்ணிய அதிர்வலைகள் எதிர்படுகின்ற மனிதர்களின் புருவ மத்தி வழியாக உட்புகுந்து மூளையில் தாமச அதிர்வலைகளை அதாவது மந்தமான மன நிலையை ஏற்படுத்தும் மனமது செம்மை இல்லாத போது செய்யப்படுகின்ற காரியங்கள் எதுவும் சரிபட்டு வராது என்பதை சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் இல்லை

அதே போல வேலையாக போகும் போது எறுமை மாடு எதிர்பட கூடாது என்று சொல்வார்கள் இது எறுமை எமனுடைய வாகனம் என்பதற்காக சொல்லப்பட்டது அல்ல எறுமை என்பது மந்தமான இயல்புடையது சனிகிரகத்தின் முழுமையான ஆளுகைக்கு உட்பட்டது அதனால் தான் சனிக்கு மந்தன் என்று ஒரு பெயரே வைக்கப்பட்டுள்ளது எறுமையிடம் இருந்து மிக சுலபமாக மனிதர்களை சனியின் தன்மை தொற்றிக்கொள்ளும் இந்த விதி எறுமையை எதோ ஒரு சமயத்தில் எதிர் கொள்பவர்க்கு பொருந்துமே தவிர எறுமையோடு வாழ்க்கை நடத்துபவர்களுக்கு பொருந்தாது என்பதையும் மனதில் வைக்க வேண்டும்

இப்படி ஒவ்வவொரு சமுகத்திலும் ஏராளமான நுணுக்கங்கள் நிறைந்த காரணங்கள் உண்டு அவைகளை தேடிப்பார்த்து சேகரித்து கொண்டால் எதிர்க்கால தலைமுறையினற்கு பயனுடையதாக இருக்கும் நமது இந்திய் பொக்கிஷங்கள் மறைந்து போகாமலும் இருக்கும்.

Monday, January 16, 2012

பத்தியம் என்றால் என்ன ?




சித்த மருத்துவ முறையிலும் மற்றும் ஏனைய மருத்துவ முறையிலும் பத்தியம் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் . ஆனால் என்ன பத்தியம் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது . அது இது என்று ஏக மழுப்பு மழுப்புவார்கள். இதோ இங்கு பத்தியத்திற்கான சில முறைகள் விளக்கப்படுகின்றது .

பொதுவான பத்திய விதிமுறை என்பது என்ன ?

பொதுவாக வாயு - வயிற்று கோளாறுகளுக்கு - உருளைக்கிழங்கு , வாழைக்காய், மொச்சை - அவரை வகை - உளுந்து - கத்திரி - மாவுப்பண்டங்கள் - கோசு - செவ்வாட்டு மாமிசம் - சேவல் கறி - முட்டை முதலிய வாயுப்போருட்களை நீக்க வேண்டும்.

குருதி - சீதக் கழிச்சல் முதலியவற்றிற்கு - மிளகாய் - மீன் - கோழி - உப்பு - கடின உணவு - முதலிய மிகு காரமான, உஷ்ணமான பொருட்களையும் நீக்க வேண்டும்.

சரும நோய்களுக்கு - மீன் - கருவாடு - பயறு வகை - கத்தரி - சோளம் -செம்மறியாட்டுக்கறி -  சேவல் மாமிசம் - கம்பு முதலிய கரப்பான் பொருட்களை நீக்க வேண்டும். 

சோகை - காமாலை - பாண்டு - பெரு வயிறு முதலியவற்றிற்கு - உப்பு - கடுகு - நல்லெண்ணை - மாமிசம் - புளி - மது வகை - கிழங்கு - காய் - பயறு - முதலிய வாயு - கரப்பான் பொருட்களை நீக்க வேண்டும். 

மூலம் - பௌத்திரம் முதலியவற்றிற்கு - மிளகாய் - புளி - கடுகு - நல்லெண்ணை - மது வகை - கேப்பை - அலைச்சல் - தூக்கம் முதலிய உஷ்ணமானவற்றையும் முறையே நீக்க வேண்டும். 

பொதுவாக எப்பிணிக்கும் மிகுவேலை -   அலைச்சல் - புளி - புகை - மது - இராவிழித்தல் - மனக் கவலை - அதிக சிந்தனை - பகலுறக்கம் - மந்த குணப்பொருட்கள் - ஆகியவற்றை நீக்க வேண்டும்.  பத்தியம் வைப்பதும் - நீக்குவதும் பண்டிதற்கு அழகு.

கடும் பத்தியத்திற்குரிய விதிமுறை என்ன ?

கடும் பத்தியத்தின் பொழுது பத்திய உணவுகளுடன் உப்பு, புளி நீக்கி உண்ணல் வேண்டும். மருந்தை நிறுத்திய பின்பும் சில நாட்கள் வரை வருத்த உப்பும், சுட்ட புளியும் கூட்டி நெய், சீரகம் தாளிதமிட்டும் சேர்த்து மறு பத்தியத்தை கடைபிடிக்க வேண்டும்.. மிகு கடும் பத்தியத்தில் புதுக் குடுவையில் சோறு வடித்து உப்பின்றி வெறும் சுடுநீர் மட்டும் சேர்த்து சாப்பிட வேண்டும். இதில் முறை தவறினால் கை, கால் முதலியன வீங்கும் .



பத்தியத்திற்கு ஏற்ற உணவுப்பொருட்களாவன :-

கட்டிய உப்பு, ஆமை, புளியாரை, சீயக்கொளுந்து, நெல்லி, அரு நெல்லி, வெள்ளாடு, முயல், ஊர்க்குருவி, காடை, மான், மரை, சுறாமீன், மயரை, குரவை, வரால், தேளி, மிளகு, சர்க்கரை, தேன், சிறுகீரை, ஆவின் பால், நெய், சிறுபயறு, பொன்னாங்கண்ணி, துவரை, அவரை பிஞ்சு, புடலம் பிஞ்சு, கதலி வாழைப்பழம் , கொதி நீர் , அத்திப்பிஞ்சு,  முருங்கை பிஞ்சு, பரட்டை கீரை, முள்ளி பிஞ்சு, தூதுளை சமூலம், கண்டங்கத்திரி பிஞ்சு, ஆகியனவாகும், இவை பிணிகளை விளக்கும் அல்லது மீற விடாது.

அம்மைக்குரிய உணவு விதி என்ன ?

அம்மை நோயால் தாக்கப்பட்டோர் முறையே எலும்பிச்சன்பழம், பழம் புளி, நெல்லிக்காய், பனங்கற்கண்டு,  கெளுத்திகருவாடு, பாசிப்பயறு, குரவை கருவாடு, வெள்ளாட்டு உப்பக்கண்டம், காடை, வெள்ளெலி, ஊர்க்குருவி, உடும்பு, அத்திபிஞ்சு, வாழைக்கச்சல், நீர்மோர், வெங்காயம் ஆகியவற்றை பத்திய உணவாக மேற்கொள்ளலாம், ஆயின், மாங்காய், தேங்காய், இலுப்பெண்ணை, நல்லெண்ணெய், சோற்றாவி, நெல்லாவி, கொட்டைமுத்தாவி, தாளித்த வாடை இவை உடலில் பட்டால் கூட கருஞ்சூலை,  கடுப்பு, கைகால் முடக்கம் ஆகியன விளையும். 

 இவ்வாறே சுரத்திற்கு ஆகாத பொருள்களும் இவையாவன. பால், இளநீர், எண்ணெய், போகம், குளிர்ந்தாறிய சோறு, மிகு நடை, தயிர் , புளிப்பு , மிகு வேலை, இனிப்பு பாகு, பச்சை மீன் . இறைச்சி, கோழி, பழங்கறி , தேங்காய், மாங்காய், நெய், பருப்பு,   முட்டை, புனுகு, சந்தனம் , தோசை, பிட்டு, பணியாரம், பயறு, அவல், பொரி, உறக்கம், மஞ்சள் வாடை, பழங்கஞ்சி, மிகு தூக்கம், ஆசையுடன் பொருள் தேடல் ,ஆகியவற்றை கைக்கொள்ளல் கூடாது. ஒருகால் தவறி சேர்ப்பின் சன்னி தோடமும், அது மீறினால் மரணமும் விளையும். 

Tuesday, January 3, 2012

முள்ளங்கி.






1. மூலிகையின் பெயர் -: முள்ளங்கி.

2.    தாவரப் பெயர் -: RAPHANUS.

3.    தாவரக் குடும்பப் பெயர் -: BRASSICACEAE.

4.    பயன்தரும் பாகங்கள் -: கிழங்கு, இலை மற்றும் விதை.

5.    வேறு பெயர்கள் -: மூலகம், மற்றும் உள்ளங்கி.

6.    வகைகள் -: வெள்ளை முள்ளங்கி, சிவப்பு முள்ளங்கி, மற்றும் மஞ்சள் முள்ளங்கி.

7.    வளரியல்பு -: முள்ளங்கி சமைத்துண்ணக்கூடிய கிழங்கினம். மணற்பாங்கான இடத்திலும், வளமான மண்ணில் நன்கு வளரும். குளிர் காலத்தில் மலைப்பிரதேசங்களில் அதிக மகசூல் கொடுக்கும். இதன் கிழங்குகள் முட்டை வடிவத்திலும், சிலிண்டர் வடிவத்திலும், உருண்டை வடிவத்திலும் இருக்கும். கிழங்குகள் இழசாக இருக்கும் போதே பிடுங்கி உபயோகிக்க வேண்டும். முற்றினால் வெண்டாகிவிடும் சமையலுக்குப் பயன்படுத்த முடியாது. இழசாக இருக்கும் போது செடியைப் பிடுங்கி கிழங்கைக் கழுவி விட்டுப் பச்சாயாகவே உப்பு காரம் போட்டுச் சாப்பிடுவார்கள், கடித்துத் தின்ன நன்றாக இருக்கும். இங்கு வெள்ளை முள்ளங்கிப் பயன்கள் கூறப்படுகின்றன. இது விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகின்றது. மேட்டுப்பாத்தி அமைத்து மண்ணைப் பக்குவப்படுத்தி விதைகளைத்தூவி பின் 2 அஙுகுல மணல்போட்டு பூவாழியில் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஈரம் அதிகம் காயாமல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். சில நாட்களில் நாற்றுகள் வளர்ந்த பின் எடுத்துப் பார்களில் நடவேண்டும். அல்லது பார்களின் உச்சியிலும் விதை ஊன்றி முழைக்க வைக்கலாம். சுமார் 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் முள்ளங்கி பிடுங்கும் தருணம் வந்து விடும். தமிழகமெங்கும் இது பயிரிடப்படுகிறது. விதை எடுக்க மட்டும் முற்ற விடுவார்கள்.

8.    மருத்துவப்பயன்கள் -: முள்ளங்கிக் கிழங்கு சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும். இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும்

, விதை காமம் பெருக்கும்.

சமைத்துண்ண அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும்.

முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலை, மாலை கொடுக்கச் சிறுநீரக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும்.

இலைச்சாற்றை 5 மி.லி. ஆக நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு, சிறுநீர்க் கட்டு, சூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும்.

இதனை இடித்து சாறு பிழிந்து 30-50 மி.லி. அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது சாப்பிடும்போது உணவில் புளி தவிர்க்கவும். மேலே கூறப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். பிற மருந்துகளோடு இது இந்த நோய்களுக்குத் துணை மருந்தாகும்.

கருவுற்ற தாய்மார்கள் இதனை வாரந்தோறும் சாப்பிட்டு வந்தால் பேறு எளிதாகும். சிறுநீர் மிகுதியும் கழியும். கை, கால் வீக்கம் வராது.

இதன் விதையைக் குடிநீராக - காசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி உண்டாகும்.