Tuesday, January 31, 2012

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என சொல்லுவது ஏன் ?


விண்வெளியில் சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் இடையே அமைந்துள்ளது, புதனின் பயணப்பாதை. ராசிச் சக்கரத்தில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் பின்வீட்டில் தென்படுவான், புதன் பகவான். மிதுனமும் கன்னியும் அவன் இருக்கும் இடங்கள், கன்னியில் உச்சம் பெற்றிருப்பதால், அவனது பலம் வலுத்திருக்கும். மிதுனம் என்றால் இருவர்; அதாவது... இணைந்த இருவர் என்று பொருள் உண்டு. நாகரிக மனித இனத்தின் வெளிப்பாடு, மிதுனம். அது முதிர்ச்சி அடைந்த நிலையைச் சுட்டிக்காட்டுவதே கன்னி. ஓடத்தில், கன்யகை கையில் பயிருடன் தென்படும் இயல்பு கன்னிக்கு உண்டு. சூரியனுடனும் (ஆன்மா) சந்திரனுடனும் (மனம்) சேர்ந்து காணப்படுவான், புதன். ராசிக் சக்கரத்தில் சூரியனுடன் இணையும் வேளையில், நிபுண யோகத்தைத் தரவல்லவன். புதன். எதிர்பாராத சிக்கலில் சிக்கிக்கொண்டாலும், 

எளிதில் வருவதற்கான சிந்தனையை, புத்திசாலித்தனத்தை அளிப்பான். புதன் என்றால், அறிதல், உள்வாங்கி உணர்தல் என்ற அர்த்தம் உண்டு (புத அவகமனே). உடலையும் உள்ளத்தையும் இணைப்பதில் புதனுக்குப் பங்கு உண்டு. ஆன்மிகத்தையும் உலகவியலையும் இணைக்கிற பாலமாகச் செயல்படுவான் புதன். மனம் நினைத்ததை புத்தி ஆராயும். அந்த வேலையை இறுதி செய்வதற்குப் புதன் தேவை. சந்திரனின் (மனம்) மைந்தனாக புதனைச் சித்திரிக்கிற தகவல், புராணத்தில் உண்டு. அதாவது, சந்திரனிலிருந்து வெளியானவன் புதன். மனத்தின் எண்ண ஓட்டத்துடன் நெருங்கிய தொடர்பு, புதனுக்கு இருப்பதையே இது உணர்த்துகிறது. 

புதன் என்றால், அறிஞர் என்கிற அர்த்தமும் உண்டு. உடலில் அணு அளவில் உள்ள மனம், புதனின் ஒத்துழைப்பில், தன்னுடைய எண்ணங்களை விரிவாக்கி, செயல்படுத்தி வெற்றிக்கு வழி வகுக்கிறது. சிந்தனை வளத்துக்கான அடித்தளம், புத்தி; அது, புதனுடன் இணைந்தே இருக்கும். நாகரிகமான சிந்தனையைத் தூண்டுபவனும், முதிர்ச்சி அடைந்த செயல்பாட்டுக்கு உரியவனும் புதனே ! அவன் வலுவிழந்தால், பாமரனாகச் செயல்படுவான்; வலுவுற்றால், அறிஞனாக விளங்குவான். கல்வியை முழுமையாகப் பெறுவதற்கு, புதனின் துணை அவசியம். வாழ்வின் வெற்றிக்கு ஆதாரமான அறிவு வளர்ச்சிக்கு, புதனின் பங்கு வலுப்பெற்றிருக்க வேண்டும். உலக சுகத்தை அடைவதற்குப் பணம் வேண்டும்; அதனை ஈட்டுவதற்கு உயரிய கல்வி வேண்டும்; 

அதனைப் பெறுவதற்கு, புதனின் ஒத்துழைப்பு தேவை. உயர்கல்வியானது பணத்தை மட்டுமே அளிக்கும். குறிப்பாக, இன்றைய சூழலில், உலக வாழ்வின் சுகத்தை அடைவதற்குப் பணத்தை ஈட்டித் தருமே தவிர, அறிவின் முதிர்ச்சியை அளிக்காது. ஆகவே, படிக்காத மேதைகள் தோன்றுவதற்கு புதனே காரணமாகிறான் !

இன்றைய கல்வியறிவு, பெரும்பாலும் தொழிலுடன் இணைந்து பணம் ஈட்டுகிற கருவியாகவே மாறிவிட்டது. அதை அளிப்பது மட்டுமின்றி, அறிவையும் அளிப்பவன், புதன் ! பேரறிவை, பெருஞானத்தை அடைவதற்கு, துறவறம் ஏற்பவர்களுக்கு புதனின் உறுதுணை அவசியம். அவனுக்கு ஸெளம்யன் என்ற பெயர் உண்டு. ஸோமன் என்றால் சந்திரன். அவனுடைய மைந்தன் என்றும் இதற்கு அர்த்தம் சொல்வர். பொதுவாக, மற்ற கிரகங்கள் யாவும் ஏனைய உடல் உறுப்புக்களுடன் தொடர்பு கொண்டிருக்கும். புதன் மட்டும், சந்திரனுடன் (மனம்) நெருங்கிய தொடர்பில் இருப்பவன் ! சூரியன், சந்திரன் ஆகிய இருவரது தொடர்பில் பலம் பெற்று, பிற கிரகங்கள் செயல்படுகின்றன. 

மற்ற ஐந்து கிரகங்களும் நட்சத்திர கிரகங்கள். அவற்றை, தாராகிரகங்கள் என்கிறது ஜோதிடம். ஆன்மாவாகிய சூரியனும், மனமாகிய சந்திரனும் வலுவாக இல்லையெனில், மற்ற கிரகங்கள் செயலற்றுவிடும்; புலன்கள் வேலைசெய்யாமல் நிலைத்துவிடும். எனவே சூரிய சந்திரருக்கு, ஜோதிர்கிரகம் எனும் அந்தஸ்து உண்டு. மனமானது நினைக்க வல்லது; புத்தி ஆராய வல்லது; அத்துடன், அதற்குத் தகுந்தபடி உத்தரவிடவும் செய்யும்; புலன்கள் அதன்படி செயல்படும், புதனுடன், வளர்பிறை சந்திரன், சுக்கிரன், குரு ஆகியோர் இணைந்தால், சிந்தனை வளம் பெருகும்; சிந்தனையில் தடங்கல் இருக்காது; வெற்றியும் மகிழ்ச்சியும் தேடி வரும். சனி, செவ்வாய், ராகு - கேது ஆகியோர் இணைந்தால், தனது வலிமையை இழப்பான் புதன்; தவறான சிந்தனைகளால், சங்கடத்தைச் சந்திக்கச் செய்வான். சூரியனுடன் நெருக்கமாக இருப்பின், நிபுண யோகத்தை அளிப்பான். 

ஆனாலும், மிக நெருங்கிய நிலையில், மௌட்யம் பெற்று, அதாவது செயல்படும் தகுதியை இழந்து, விபரீத பலனைத் தந்து விடுவான். புதன். அஸ்தமனமானால், அதாவது சூரிய ஒளியில் தென்படாமல் இருப்பின், செயல்பட மனமிருந்தும் இயலாத நிலைக்குத் தள்ளுவான். இதனால்தான், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பர். முன்னோர், அதாவது, பொன் குவிந்திருப்பினும், அறிவ பெருகுவது அரிது ! செல்வந்தர்கள் பலருக்கு அறிவுரை வழங்க, அறிவாளிகள் தேவைப்படுவது உண்டு. பணத்தைப் பல வழிகளிலும் ஈட்டலாம்; அதனைத் தக்கவைத்துக் கொள்ள அறிவு தேவை. அதற்கு, ராசிச் சக்கரத்தில் புதன் வலுவுற்றிருக்க வேண்டும். செவ்வாயுடன் இணைந்தால், ரஜோ குணத்தின் சேர்க்கையால், சிந்தனை திசை திரும்பும் விரும்பத்தகாத விளைவுகளுக்குக் காரணமாகி விடுவான்,

 புதன் ! சனியுடன் இணைந்திடின், மெத்தனத்துடன் இருக்கச் செய்து, அறிவிருந்தும் பாமரன்போல் செயல்பட வைப்பான். சனி, புருஷத்தன்மை கலந்த அலி; புதன், பெண்மை கலந்த அலி என அவர்களின் தரம் குறித்து விவரிக்கிறது ஜோதிடம். ஆகவே, அவர்களின் சேர்க்கை, இரண்டும் கெட்டான் பலத்தையே வழங்கும் என உறுதி செய்கிறது. அதேபோல், ராகு - கேதுவோடு இணைந்தாலும் நற்பலனை அளிக்கமாட்டான், புதன். ஏனெனில், இந்தக் கிரகங்களை நிழல்கிரகம் என்கிறது ஜோதிடம் (சாயா கிரஹ). அதாவது, இருள், அறியாமை என்று அர்த்தம். இருளில் மறைவதும், அறியாமை ஆட்கொள்வதும் செயல்பாட்டையே முடக்கிவிடும் அல்லவா ?!

புதன், சுபக்கிரகம். ஆனால், பாபக் கிரகத்துடன் இணைந்தால், பாவியாக மாறுவான் என்கிறது ஜோதிடம். அப்படித்தான், அறிவானது, துஷ்டனுடன் இணையும் போது மங்கிவிடும். நல்லவனுடன் இணைய... துளிர்விட்டு மிளிரும், ஆசை, கோபம், அறியாமை, அகங்காரம், அசூயை ஆகிய அனைத்தும் மனதில் இணைந்திருக்கும்; அன்பு, பண்பு, உண்மை, சகிப்புத்தன்மை, அடக்கம், இரக்கம் ஆகிய நற்குணங்களும் மனதுள் இருக்கும். புதன் வலுப்பெற்றால், துர்குணங்களை அடக்கி, நற்குணங்களை வளர்க்கும்; 

சிந்தனைத் தரத்தை உயர்த்தும்; நல்ல குடிமகனாக மாறச் செய்யும். புதன், மற்ற கிரகங்களுடன் சேராமல், மிதுனத்திலோ கன்னியிலோ வீற்றிருக்கும் வேளையில், எதிர்மறையான பலனைத் தருவான் என்கிறது ஜோதிடம். தனுர் லக்னம் அல்லது மீன லக்னம்; புதன்.. மிதுனம் அல்லது கன்னியில் வீற்றிருந்தால், கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகும்; இதனால் விபரீத பலனே கிடைக்கும் என்பர். தனுர் லக்னமானால், ஏழிலும் பத்திலும் இருக்கிற புதனுக்கு, கேந்திராதிபத்ய தோஷம் உண்டு. மீனமெனில், நான்கிலும் ஏழிலும் அந்தத் தோஷம் இருக்கும். நாலு கேந்திரங்கள் இருந்தாலும், 4-வது கேந்திரத்தில் இருக்கிற புதன், உலக சுகத்தால் கிடைக்கிற மகிழ்ச்சியை இழக்கச் செய்வான்; மற்ற கேந்திரங்களின் பலனை இழக்க வைக்கமாட்டான் எனும் விளக்கமும் ஜோதிடத்தில் உண்டு, புதனானவன், அறிவு வழிச் சுகத்தை அடையவும் செய்வான்; இழக்கவும் வைப்பான். காலத்தின் அளவுகோலான ஒரு வாரத்தின் நடுநாயகமாக வீற்றிருப்பவன், 

புதன். மனதில் படிந்த அழுக்கு மற்றும் உடலில் தென்படும் அழுக்கு ஆகியவற்றை அகற்ற, புதன்கிழமை சிறந்தது என்கிறது சாஸ்திரம். முடியும் நகமும் உடலின் கழிவுப் பொருட்கள் என்கிறது ஆயுர்வேதம். மஜ்ஜை, எலும்பு இவற்றின் கழிவுகள் என்றும் தெரிவிக்கிறது. அந்தக் கழிவுகளை அகற்றுவதற்கு, புதன் கிழமையைப் பரிந்துரைக்கிறது தர்மசாஸ்திரம். அதனால்தான், அந்தக் காலத்தில் புதன்கிழமையன்று க்ஷவரம் செய்துகொள்வார்கள். (குர்வீத் புத சோமயோ:). ஆண்கள், எண்ணெய் தேய்த்துக் குளிக்க, புதன் கிழமையையே தேர்ந்தெடுக்கும் சம்பிரதாயமும் உண்டு. எண்ணெய் தேய்த்துக் குளித்தால், உடல் அழுக்கு அகன்றுவிடும். தற்காலச் சூழலால் அது விலக்கப்பட்டாலும் அதன் பெருமை குன்றிவிடாது.

பூர்வஜென்ம வினைக்குத் தக்கபடி, பிறக்கும் வேளை அமையும். வினையின் முழு உருவத்தை ஜாதகத்தில், வீடுகளில் அமர்ந்த கிரகங்கள் விளக்கும். புதன் வலுவுடனும், மற்ற கிரகங்களின் தாக்கத்தால் வலுவிழக்காமலும் இருந்தால், அதனால் விளைகிற நற்பயன்கள் யாவும் முன் ஜென்ம புண்ணியத்தின் சேமிப்பு என அறியலாம். கிரகங்களின் கூட்டுப்பயன் தான் நடைமுறைக்கு வரும். ஆகவேதான், வீடுகளுக்கு ராசி என்றால் கூட்டம் என்று அர்த்தம், நெற் குவியலை தான்ய ராசி என்றும், பணக் குவியலை தன ராசி என்றும் சொல்வர். தனியொரு கிரகம், மற்ற கிரகங்களின் தாக்கத்தை முறியடித்துப் பலன் தராது. அவற்றுடன் இணைந்து, சிறு மாறுபாட்டுடன் தனது பலனை நடைமுறைப்படுத்தும். 

முற்றும் துறந்த சில துறவிகள், அறிஞர்கள், பெரியோர்களிடம் சில அல்பத்தனங்களும் தென்படும். பெருமையில் இந்தச் சிறுமை புலப்படாது. ராசி புருஷனின் நாலாம் வீட்டுக்கும் ஆறாம் வீட்டுக்கும் உடையவனாகச் சித்திரிப்பதால், மகிழ்ச்சியின் இழப்பு, எதிரியின் தாக்கம் ஆகியவை நேரிட புதன் காரணமாகிறான். வலுப்பெற்ற புதனுக்கு, குரு மற்றும் செவ்வாயின் பார்வை சேர்ந்து வரும்போது, அறிவை வளர்க்க குரு உதவினாலும், செவ்வாய் அகங்காரத்தை அளித்து, அறிவை மங்கச் செய்வதும் நிகழும். அகங்காரம் வெளிப்படுகிற அறிஞர்களும் உண்டு. விவேகம் அகங்காரத்தை அழிக்க வேண்டும். ஆனால், செயல்படாது போய்விடும். புதனை வழிபட்டால், அகங்காரம் அழியும்; அமைதி கிடைக்கும். விவேகத்தைத் தரவல்லவன் புதன் பகவான்; அவனை வழிபட, விவேகம் வளரும் ! அடக்கமும் சகிப்புத்தன்மையும் இருந்தால் வளமான வாழ்க்கை நிச்சயம், பும் புதாய நம: என்று சொல்லி புதன் பகவானது திருவிக்கிரகத்துக்கு 16 உபசாரங்களைச் செய்யுங்கள். அல்லது, அதன் அதிவேதையான ஸ்ரீமந் நாராயணனை, நமோ நாராயணாய என்று சொல்லி, புதனை வழிபடுங்கள். இன்னலை அகற்றி, இன்பத்தை வழங்குவான் ! 

பஞ்சபூதங்களில், பூமியின் பங்கு புதனில் உண்டு. நம் உடலிலும் பூமியின் பங்கு உண்டு. ஆகவே, பூமித் தாயில் வழிபாடு, புதன் பகவானின் வழிபாடாக மாறிவிடும். சமுத்ரவஸனே ! தேவி ! பர்வதஸ்தன மண்டிதே ! விஷ்ணு பத்னி ! நமஸ்துப்யம் பாதஸ்பர்சம்க்ஷமஸ்வமே எனும் ஸ்லோகத்தை மனதாரச் சொல்லலாம்.

ஸெளம்ய ! ஸெளம்ய குணோபேத !
புதக்ரஹ மஹாமதே !
ஆத்மானாத்ம விவேகம் மே
ஜயை த்வத்பரசாதத:

- என்று சொல்லி வணங்கி, இயற்கையில் விளைந்த பொருட்களை புதனுக்கு அர்ப்பணிக்கலாம். புதன்கிழமை நன்னாளில், இப்படி மனதாரப் பிரார்த்தியுங்கள். ஆர்வத்துடன் விஸ்தாரமான பூஜையில் இறங்கவேண்டாம்; ஆடம்பரத்தில், பூஜை மூழ்கிப் போகும்; சோர்வு ஏற்பட்டு, ஒரே நாளில் பூஜை நின்றுவிடும். என்றென்றைக்கும் நடைமுறைப்படுத்தும் அளவுக்கு வழிபட்டால், தடங்கலின்றி பூஜையைத் தொடர முடியும். ஒருவேளை, பூஜைக்கு நேரம் கிடைக்காது போனால், மனதுள் புதன் பகவானது மூல மந்திரத்தையும் ஸ்லோகத்தையும் சொல்ல... மருத்துவரையும் தேட வேண்டாம்; ஜோதிடரையும் பார்க்க வேண்டாம் ! ஆரோக்கியமும் அமைதியும்தான், நாம் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிற சொத்து. அவை கிடைப்பதற்கு, புதன் பகவானை வணங்குங்கள்; வளம் பெறுவீர்கள்!

Saturday, January 21, 2012

கணவனை இழந்தவள் கெட்ட சகுனமா...?




சகுனங்களை பற்றி மிக தவறுதலான புரிந்துணர்வே நம் மக்கள் மத்தியில் நிலவுகிறது அதற்கு காரணம் சில சகுனங்கள் நன்மை என்றும் சில சகுனங்கள் தீமை என்றும் சொல்லப்படுகிறதே தவிர எதற்காக அது நன்மை எதற்காக அது தீமை தருகிறது என்று காரண காரிய விளக்கங்கள் எதுவும் சொல்லப்படுவது இல்லை

மனிதனுடைய அறிவு ஒரு செயலை செய்யாதே என்று தடை வருகின்ற போது அதை ஏன் செய்ய கூடாது என்று கேள்வி கேட்கும் அதாவது சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திர வேளையில் கிணறு வெட்டக்கூடாது என்று சொன்னால் ஏன் வெட்டக்கூடாது வெட்டினால் என்ன என்ற கேள்வியை அறிவு கேட்கும் அப்படி கேட்பதை யாரும் தவறு என்றோ அதிக பிரசங்கி தனம் என்றோ சொல்ல முடியாது

சித்திரை மாதத்தில் வெயில் அதிகமாக இருக்கும் ஈரப்பதம் இல்லாமல் மண் இறுகி போய்விடும் நிலத்தடி நீர் மிகவும் கீழே இறங்கி விடும் அதனால் அந்த நேரத்தில் கிணறு தோண்டப்படும் போது மிகவும் கடினமான வேலையாகவும் இருக்கும் நீர் ஊற்று கிடைக்காமலும் போய்விடும் என்று விளக்கம் சொல்ல வேண்டியது சித்திரை மாதத்தில் கிணறு தோண்ட கூடாது என்று சாஸ்திர வகுத்தவர்களின் கடைமையாகும்

நமது இந்திய சாஸ்திரங்கள் அனைத்துமே அனுபவங்களையும் விஞ்ஞான உண்மைகளையும் அடிப்படையாக கொண்டவைகள் ஆகும் உதாரணமாக மாலை நேரத்தில் வீடு வாசல் பெருக்கி தெளித்து எல்லாபுறத்து கதவுகளையும் திறந்து வைக்க வேண்டுமென்று சாஸ்திரம் சொல்கிறது அப்படி வைத்தால் மாகலக்ஷ்மியானவள் வீட்டுக்கு வருகை தருவாள் வீட்டை வறுமை அணுகாமல் பாதுகாப்பாள் என்றும் சொல்லப்படுகிறது இதன் உண்மை என்ன ?

மாலை நேர காற்று தெற்கு பக்கமாக இருந்து வீசும் தெற்கு திசையில் இருந்து வருகின்ற காற்று என்பதனால் தான் அது தென்றல் காற்று என்று அழைக்கப்படுகிறது அந்த தென்றல் காற்று வீட்டு முன்புறமாகவோ பின்புறமாகவோ அல்லது வேறு எந்த வழியாகவோ வீட்டிற்குள் வரவேண்டும் தென்றல் வீட்டுக்குள் வருவதனால் காலையில் இருந்து மாலை வரை உருவான வெப்பக்காற்று வெளியேறும் ஒரு புத்துணர்ச்சியான இனிய சூழ்நிலை வீட்டிற்குள் நிலவும் அப்போது அங்கே வசிக்கும் மனிதர்களின் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெரும் நற்காரியங்களை சிந்திக்கும் நற்க்காரியங்க்களை செயல்படுத்தும் நல்லதை மட்டுமே ஒரு மனிதன் செய்யும் போது அவனிடம் மகாலட்சுமி வராமல் வேறு எங்கு போவாள் !



ஆனால் இப்படி சில நடைமுறைகளுக்கு விளக்கம் சொன்ன நமது சாஸ்திர வல்லுனர்கள் சகுன சாஸ்திரத்திற்கு சரியான விளக்கங்கள் சொல்லாமல் போனது நமது துரதிஸ்டமே ஆகும் வல்லுனர்கள் சொல்லவில்லையே தவிர சகுன சாஸ்திரத்தில் பல இடங்களில் இலைமறை காயாக காரண காரியங்களை விளக்கி இருக்கிறார்கள்

உதாரணமாக கணவனை இழந்த மாது எதிரே வந்தால் நாம் போகும் காரியம் வெற்றி பெறாது என்று சகுன சாஸ்திரம் சொல்கிறது இதனுடைய உள்ளர்த்தம் என்வென்று தெரியாத சிலர் உடும்பு பிடியாக அதை பிடித்து கொண்டு எதிரே வருகின்ற விதவை பெண்ணை மனம் போன போக்கில் ஏசியும் பேசியும் விடுகிறார்கள் இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சில பகுத்தறிவு மாக புத்திசாலிகள் இந்து மத சம்பிரதாயங்கள் அனைத்துமே மனிதாபிமானம் அற்றவைகள் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்

உண்மையில் சகுன சாஸ்திரம் விதைகள் எதிர்படுவது கெடுதிஎன்று சொல்லவேண்டிய அவசியம் என்ன என்று யாரும் யோசிப்பது இல்லை அதை நம்புவர்கள் கூட அதற்கு சரியான விளக்கங்களை தருவது கிடையாது காரணம் அப்படி ஒரு விளக்கம் இருப்பதே அவர்களுக்கு தெரியாது

ஒரு பெண் கணவனை இழக்கிறாள் என்றால் அவள் ஜாதகத்தில் ராகு அல்லது கேது மிக பாதகமான நிலையில் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டும் தான் அவள் கணவனை இழந்து வாழும் பரிதாப நிலை ஏற்படும் ராகு கேதுக்கள் பாதகமான நிலையில் யார் ஜாதகத்தில் இருக்கிறதோ அவர்களிடம் இருந்து அந்த கிரகத்தின் தீய கதிர்வீச்சு வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் அப்படி வெளிப்படும் நுண்ணிய அதிர்வலைகள் எதிர்படுகின்ற மனிதர்களின் புருவ மத்தி வழியாக உட்புகுந்து மூளையில் தாமச அதிர்வலைகளை அதாவது மந்தமான மன நிலையை ஏற்படுத்தும் மனமது செம்மை இல்லாத போது செய்யப்படுகின்ற காரியங்கள் எதுவும் சரிபட்டு வராது என்பதை சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் இல்லை

அதே போல வேலையாக போகும் போது எறுமை மாடு எதிர்பட கூடாது என்று சொல்வார்கள் இது எறுமை எமனுடைய வாகனம் என்பதற்காக சொல்லப்பட்டது அல்ல எறுமை என்பது மந்தமான இயல்புடையது சனிகிரகத்தின் முழுமையான ஆளுகைக்கு உட்பட்டது அதனால் தான் சனிக்கு மந்தன் என்று ஒரு பெயரே வைக்கப்பட்டுள்ளது எறுமையிடம் இருந்து மிக சுலபமாக மனிதர்களை சனியின் தன்மை தொற்றிக்கொள்ளும் இந்த விதி எறுமையை எதோ ஒரு சமயத்தில் எதிர் கொள்பவர்க்கு பொருந்துமே தவிர எறுமையோடு வாழ்க்கை நடத்துபவர்களுக்கு பொருந்தாது என்பதையும் மனதில் வைக்க வேண்டும்

இப்படி ஒவ்வவொரு சமுகத்திலும் ஏராளமான நுணுக்கங்கள் நிறைந்த காரணங்கள் உண்டு அவைகளை தேடிப்பார்த்து சேகரித்து கொண்டால் எதிர்க்கால தலைமுறையினற்கு பயனுடையதாக இருக்கும் நமது இந்திய் பொக்கிஷங்கள் மறைந்து போகாமலும் இருக்கும்.

Monday, January 16, 2012

பத்தியம் என்றால் என்ன ?




சித்த மருத்துவ முறையிலும் மற்றும் ஏனைய மருத்துவ முறையிலும் பத்தியம் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் . ஆனால் என்ன பத்தியம் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது . அது இது என்று ஏக மழுப்பு மழுப்புவார்கள். இதோ இங்கு பத்தியத்திற்கான சில முறைகள் விளக்கப்படுகின்றது .

பொதுவான பத்திய விதிமுறை என்பது என்ன ?

பொதுவாக வாயு - வயிற்று கோளாறுகளுக்கு - உருளைக்கிழங்கு , வாழைக்காய், மொச்சை - அவரை வகை - உளுந்து - கத்திரி - மாவுப்பண்டங்கள் - கோசு - செவ்வாட்டு மாமிசம் - சேவல் கறி - முட்டை முதலிய வாயுப்போருட்களை நீக்க வேண்டும்.

குருதி - சீதக் கழிச்சல் முதலியவற்றிற்கு - மிளகாய் - மீன் - கோழி - உப்பு - கடின உணவு - முதலிய மிகு காரமான, உஷ்ணமான பொருட்களையும் நீக்க வேண்டும்.

சரும நோய்களுக்கு - மீன் - கருவாடு - பயறு வகை - கத்தரி - சோளம் -செம்மறியாட்டுக்கறி -  சேவல் மாமிசம் - கம்பு முதலிய கரப்பான் பொருட்களை நீக்க வேண்டும். 

சோகை - காமாலை - பாண்டு - பெரு வயிறு முதலியவற்றிற்கு - உப்பு - கடுகு - நல்லெண்ணை - மாமிசம் - புளி - மது வகை - கிழங்கு - காய் - பயறு - முதலிய வாயு - கரப்பான் பொருட்களை நீக்க வேண்டும். 

மூலம் - பௌத்திரம் முதலியவற்றிற்கு - மிளகாய் - புளி - கடுகு - நல்லெண்ணை - மது வகை - கேப்பை - அலைச்சல் - தூக்கம் முதலிய உஷ்ணமானவற்றையும் முறையே நீக்க வேண்டும். 

பொதுவாக எப்பிணிக்கும் மிகுவேலை -   அலைச்சல் - புளி - புகை - மது - இராவிழித்தல் - மனக் கவலை - அதிக சிந்தனை - பகலுறக்கம் - மந்த குணப்பொருட்கள் - ஆகியவற்றை நீக்க வேண்டும்.  பத்தியம் வைப்பதும் - நீக்குவதும் பண்டிதற்கு அழகு.

கடும் பத்தியத்திற்குரிய விதிமுறை என்ன ?

கடும் பத்தியத்தின் பொழுது பத்திய உணவுகளுடன் உப்பு, புளி நீக்கி உண்ணல் வேண்டும். மருந்தை நிறுத்திய பின்பும் சில நாட்கள் வரை வருத்த உப்பும், சுட்ட புளியும் கூட்டி நெய், சீரகம் தாளிதமிட்டும் சேர்த்து மறு பத்தியத்தை கடைபிடிக்க வேண்டும்.. மிகு கடும் பத்தியத்தில் புதுக் குடுவையில் சோறு வடித்து உப்பின்றி வெறும் சுடுநீர் மட்டும் சேர்த்து சாப்பிட வேண்டும். இதில் முறை தவறினால் கை, கால் முதலியன வீங்கும் .



பத்தியத்திற்கு ஏற்ற உணவுப்பொருட்களாவன :-

கட்டிய உப்பு, ஆமை, புளியாரை, சீயக்கொளுந்து, நெல்லி, அரு நெல்லி, வெள்ளாடு, முயல், ஊர்க்குருவி, காடை, மான், மரை, சுறாமீன், மயரை, குரவை, வரால், தேளி, மிளகு, சர்க்கரை, தேன், சிறுகீரை, ஆவின் பால், நெய், சிறுபயறு, பொன்னாங்கண்ணி, துவரை, அவரை பிஞ்சு, புடலம் பிஞ்சு, கதலி வாழைப்பழம் , கொதி நீர் , அத்திப்பிஞ்சு,  முருங்கை பிஞ்சு, பரட்டை கீரை, முள்ளி பிஞ்சு, தூதுளை சமூலம், கண்டங்கத்திரி பிஞ்சு, ஆகியனவாகும், இவை பிணிகளை விளக்கும் அல்லது மீற விடாது.

அம்மைக்குரிய உணவு விதி என்ன ?

அம்மை நோயால் தாக்கப்பட்டோர் முறையே எலும்பிச்சன்பழம், பழம் புளி, நெல்லிக்காய், பனங்கற்கண்டு,  கெளுத்திகருவாடு, பாசிப்பயறு, குரவை கருவாடு, வெள்ளாட்டு உப்பக்கண்டம், காடை, வெள்ளெலி, ஊர்க்குருவி, உடும்பு, அத்திபிஞ்சு, வாழைக்கச்சல், நீர்மோர், வெங்காயம் ஆகியவற்றை பத்திய உணவாக மேற்கொள்ளலாம், ஆயின், மாங்காய், தேங்காய், இலுப்பெண்ணை, நல்லெண்ணெய், சோற்றாவி, நெல்லாவி, கொட்டைமுத்தாவி, தாளித்த வாடை இவை உடலில் பட்டால் கூட கருஞ்சூலை,  கடுப்பு, கைகால் முடக்கம் ஆகியன விளையும். 

 இவ்வாறே சுரத்திற்கு ஆகாத பொருள்களும் இவையாவன. பால், இளநீர், எண்ணெய், போகம், குளிர்ந்தாறிய சோறு, மிகு நடை, தயிர் , புளிப்பு , மிகு வேலை, இனிப்பு பாகு, பச்சை மீன் . இறைச்சி, கோழி, பழங்கறி , தேங்காய், மாங்காய், நெய், பருப்பு,   முட்டை, புனுகு, சந்தனம் , தோசை, பிட்டு, பணியாரம், பயறு, அவல், பொரி, உறக்கம், மஞ்சள் வாடை, பழங்கஞ்சி, மிகு தூக்கம், ஆசையுடன் பொருள் தேடல் ,ஆகியவற்றை கைக்கொள்ளல் கூடாது. ஒருகால் தவறி சேர்ப்பின் சன்னி தோடமும், அது மீறினால் மரணமும் விளையும். 

Tuesday, January 3, 2012

முள்ளங்கி.






1. மூலிகையின் பெயர் -: முள்ளங்கி.

2.    தாவரப் பெயர் -: RAPHANUS.

3.    தாவரக் குடும்பப் பெயர் -: BRASSICACEAE.

4.    பயன்தரும் பாகங்கள் -: கிழங்கு, இலை மற்றும் விதை.

5.    வேறு பெயர்கள் -: மூலகம், மற்றும் உள்ளங்கி.

6.    வகைகள் -: வெள்ளை முள்ளங்கி, சிவப்பு முள்ளங்கி, மற்றும் மஞ்சள் முள்ளங்கி.

7.    வளரியல்பு -: முள்ளங்கி சமைத்துண்ணக்கூடிய கிழங்கினம். மணற்பாங்கான இடத்திலும், வளமான மண்ணில் நன்கு வளரும். குளிர் காலத்தில் மலைப்பிரதேசங்களில் அதிக மகசூல் கொடுக்கும். இதன் கிழங்குகள் முட்டை வடிவத்திலும், சிலிண்டர் வடிவத்திலும், உருண்டை வடிவத்திலும் இருக்கும். கிழங்குகள் இழசாக இருக்கும் போதே பிடுங்கி உபயோகிக்க வேண்டும். முற்றினால் வெண்டாகிவிடும் சமையலுக்குப் பயன்படுத்த முடியாது. இழசாக இருக்கும் போது செடியைப் பிடுங்கி கிழங்கைக் கழுவி விட்டுப் பச்சாயாகவே உப்பு காரம் போட்டுச் சாப்பிடுவார்கள், கடித்துத் தின்ன நன்றாக இருக்கும். இங்கு வெள்ளை முள்ளங்கிப் பயன்கள் கூறப்படுகின்றன. இது விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகின்றது. மேட்டுப்பாத்தி அமைத்து மண்ணைப் பக்குவப்படுத்தி விதைகளைத்தூவி பின் 2 அஙுகுல மணல்போட்டு பூவாழியில் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஈரம் அதிகம் காயாமல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். சில நாட்களில் நாற்றுகள் வளர்ந்த பின் எடுத்துப் பார்களில் நடவேண்டும். அல்லது பார்களின் உச்சியிலும் விதை ஊன்றி முழைக்க வைக்கலாம். சுமார் 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் முள்ளங்கி பிடுங்கும் தருணம் வந்து விடும். தமிழகமெங்கும் இது பயிரிடப்படுகிறது. விதை எடுக்க மட்டும் முற்ற விடுவார்கள்.

8.    மருத்துவப்பயன்கள் -: முள்ளங்கிக் கிழங்கு சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும். இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும்

, விதை காமம் பெருக்கும்.

சமைத்துண்ண அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும்.

முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலை, மாலை கொடுக்கச் சிறுநீரக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும்.

இலைச்சாற்றை 5 மி.லி. ஆக நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு, சிறுநீர்க் கட்டு, சூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும்.

இதனை இடித்து சாறு பிழிந்து 30-50 மி.லி. அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது சாப்பிடும்போது உணவில் புளி தவிர்க்கவும். மேலே கூறப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். பிற மருந்துகளோடு இது இந்த நோய்களுக்குத் துணை மருந்தாகும்.

கருவுற்ற தாய்மார்கள் இதனை வாரந்தோறும் சாப்பிட்டு வந்தால் பேறு எளிதாகும். சிறுநீர் மிகுதியும் கழியும். கை, கால் வீக்கம் வராது.

இதன் விதையைக் குடிநீராக - காசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி உண்டாகும்.