Monday, January 16, 2012

பத்தியம் என்றால் என்ன ?




சித்த மருத்துவ முறையிலும் மற்றும் ஏனைய மருத்துவ முறையிலும் பத்தியம் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் . ஆனால் என்ன பத்தியம் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது . அது இது என்று ஏக மழுப்பு மழுப்புவார்கள். இதோ இங்கு பத்தியத்திற்கான சில முறைகள் விளக்கப்படுகின்றது .

பொதுவான பத்திய விதிமுறை என்பது என்ன ?

பொதுவாக வாயு - வயிற்று கோளாறுகளுக்கு - உருளைக்கிழங்கு , வாழைக்காய், மொச்சை - அவரை வகை - உளுந்து - கத்திரி - மாவுப்பண்டங்கள் - கோசு - செவ்வாட்டு மாமிசம் - சேவல் கறி - முட்டை முதலிய வாயுப்போருட்களை நீக்க வேண்டும்.

குருதி - சீதக் கழிச்சல் முதலியவற்றிற்கு - மிளகாய் - மீன் - கோழி - உப்பு - கடின உணவு - முதலிய மிகு காரமான, உஷ்ணமான பொருட்களையும் நீக்க வேண்டும்.

சரும நோய்களுக்கு - மீன் - கருவாடு - பயறு வகை - கத்தரி - சோளம் -செம்மறியாட்டுக்கறி -  சேவல் மாமிசம் - கம்பு முதலிய கரப்பான் பொருட்களை நீக்க வேண்டும். 

சோகை - காமாலை - பாண்டு - பெரு வயிறு முதலியவற்றிற்கு - உப்பு - கடுகு - நல்லெண்ணை - மாமிசம் - புளி - மது வகை - கிழங்கு - காய் - பயறு - முதலிய வாயு - கரப்பான் பொருட்களை நீக்க வேண்டும். 

மூலம் - பௌத்திரம் முதலியவற்றிற்கு - மிளகாய் - புளி - கடுகு - நல்லெண்ணை - மது வகை - கேப்பை - அலைச்சல் - தூக்கம் முதலிய உஷ்ணமானவற்றையும் முறையே நீக்க வேண்டும். 

பொதுவாக எப்பிணிக்கும் மிகுவேலை -   அலைச்சல் - புளி - புகை - மது - இராவிழித்தல் - மனக் கவலை - அதிக சிந்தனை - பகலுறக்கம் - மந்த குணப்பொருட்கள் - ஆகியவற்றை நீக்க வேண்டும்.  பத்தியம் வைப்பதும் - நீக்குவதும் பண்டிதற்கு அழகு.

கடும் பத்தியத்திற்குரிய விதிமுறை என்ன ?

கடும் பத்தியத்தின் பொழுது பத்திய உணவுகளுடன் உப்பு, புளி நீக்கி உண்ணல் வேண்டும். மருந்தை நிறுத்திய பின்பும் சில நாட்கள் வரை வருத்த உப்பும், சுட்ட புளியும் கூட்டி நெய், சீரகம் தாளிதமிட்டும் சேர்த்து மறு பத்தியத்தை கடைபிடிக்க வேண்டும்.. மிகு கடும் பத்தியத்தில் புதுக் குடுவையில் சோறு வடித்து உப்பின்றி வெறும் சுடுநீர் மட்டும் சேர்த்து சாப்பிட வேண்டும். இதில் முறை தவறினால் கை, கால் முதலியன வீங்கும் .



பத்தியத்திற்கு ஏற்ற உணவுப்பொருட்களாவன :-

கட்டிய உப்பு, ஆமை, புளியாரை, சீயக்கொளுந்து, நெல்லி, அரு நெல்லி, வெள்ளாடு, முயல், ஊர்க்குருவி, காடை, மான், மரை, சுறாமீன், மயரை, குரவை, வரால், தேளி, மிளகு, சர்க்கரை, தேன், சிறுகீரை, ஆவின் பால், நெய், சிறுபயறு, பொன்னாங்கண்ணி, துவரை, அவரை பிஞ்சு, புடலம் பிஞ்சு, கதலி வாழைப்பழம் , கொதி நீர் , அத்திப்பிஞ்சு,  முருங்கை பிஞ்சு, பரட்டை கீரை, முள்ளி பிஞ்சு, தூதுளை சமூலம், கண்டங்கத்திரி பிஞ்சு, ஆகியனவாகும், இவை பிணிகளை விளக்கும் அல்லது மீற விடாது.

அம்மைக்குரிய உணவு விதி என்ன ?

அம்மை நோயால் தாக்கப்பட்டோர் முறையே எலும்பிச்சன்பழம், பழம் புளி, நெல்லிக்காய், பனங்கற்கண்டு,  கெளுத்திகருவாடு, பாசிப்பயறு, குரவை கருவாடு, வெள்ளாட்டு உப்பக்கண்டம், காடை, வெள்ளெலி, ஊர்க்குருவி, உடும்பு, அத்திபிஞ்சு, வாழைக்கச்சல், நீர்மோர், வெங்காயம் ஆகியவற்றை பத்திய உணவாக மேற்கொள்ளலாம், ஆயின், மாங்காய், தேங்காய், இலுப்பெண்ணை, நல்லெண்ணெய், சோற்றாவி, நெல்லாவி, கொட்டைமுத்தாவி, தாளித்த வாடை இவை உடலில் பட்டால் கூட கருஞ்சூலை,  கடுப்பு, கைகால் முடக்கம் ஆகியன விளையும். 

 இவ்வாறே சுரத்திற்கு ஆகாத பொருள்களும் இவையாவன. பால், இளநீர், எண்ணெய், போகம், குளிர்ந்தாறிய சோறு, மிகு நடை, தயிர் , புளிப்பு , மிகு வேலை, இனிப்பு பாகு, பச்சை மீன் . இறைச்சி, கோழி, பழங்கறி , தேங்காய், மாங்காய், நெய், பருப்பு,   முட்டை, புனுகு, சந்தனம் , தோசை, பிட்டு, பணியாரம், பயறு, அவல், பொரி, உறக்கம், மஞ்சள் வாடை, பழங்கஞ்சி, மிகு தூக்கம், ஆசையுடன் பொருள் தேடல் ,ஆகியவற்றை கைக்கொள்ளல் கூடாது. ஒருகால் தவறி சேர்ப்பின் சன்னி தோடமும், அது மீறினால் மரணமும் விளையும். 

No comments:

Post a Comment